ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்த.. மாணவியின் பட்டத்தை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் இருந்து மாணவி பட்டம் பெற மறுத்த விவகாரத்தில், அந்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்காக டிச.18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, ஆளுநர் ஆர் என் ரவி கையினால் பட்டம் பெற மறுத்து மாணவி ஜீன் ஜோசப் என்பவர் துணை வேந்தரிடம் பட்டம் பெற்றுக்கொண்டார்.

பட்டமளிப்பு விழா மேடையில், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் துணைவேந்தர் என். சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர். மாணவ - மாணவிகள் வரிசையாக தங்களது பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கி சென்ற நிலையில், ஆராய்ச்சி பட்டம் பெற வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி மட்டும் ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சந்திரசேகரிடம் காட்டி அதனை பெற்றுக்கொண்டு வாழ்த்து பெற்று மேடையில் இருந்து இறங்கினார்.
ஆளுநர் ஆர் என் ரவியிடம் இருந்து பட்டம் வாங்க மறுத்தது அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த மாணவி கூறுகையில், "தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டம் வாங்க விருப்பப்படவில்லை" என்று கூறினார்.
இந்த நிலையில், ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்யக்கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்காக டிச.18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல" என்று கூறியது.












Click it and Unblock the Notifications