பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்.. பெரும் கவலையில் குடும்பத்தினர், உறவினர்கள்
அபிநந்தன் மாயமானதால் அவரது குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர்.
Recommended Video
சென்னை: பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த விமானபடை விமானி அபிநந்தனின் குடும்பத்தினர் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனால் ஊடகங்கள் காட்சி எடுக்கவோ, பேட்டி எடுக்கவோ வேண்டாம் என அபிநந்தனின் தந்தை வர்த்தமான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் படையினரிடம் சிக்கிய அபிநந்தன் குறித்த வீடியோக்கள் ஒருபக்கம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் பிடிபட்டுள்ளதை இந்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் குரல்கள் எழுந்துள்ளன. அவரது குடும்பத்தினரும் கவலையுடன் உள்ளனர்.
உறவினர்கள்
சென்னை கிழக்கு தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில்தான் அபிநந்தன் வீடு உள்ளது. இங்குதான் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வசித்து வருகின்றனர்.
விமான படை
மாடம்பாக்கத்தில் உள்ள ஜல்வாயு விஹார் பகுதியில்தான் அவரது வீடு உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ஓய்வு பெற்ற விமானப்படையினர், பணியில் உள்ளவர்கள் என பாதுகாப்புப் படையினர் வசிக்கும் பகுதியாகும்.
வேண்டுகோள்
அபிநந்தன் குறித்து அவரது குடும்பத்தினர் கருத்து கூற மறுத்து வருகின்றனர். அதேசமயம், அவர்கள் கவலையுடன் உள்ளனர். உறவினர்களும் வீட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் ஊடகங்கள் காட்சி எடுக்கவோ, பேட்டி எடுக்கவோ வேண்டாம் என அபிநந்தனின் தந்தை வர்த்தமான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூர்வீகம்
அபிநந்தன் கேரளாவைச் சேர்ந்தவர் என்று முதலில் தகவல்கள் கூறின. ஆனால் அவரது பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனவூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அபிநந்தனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். இவரது தந்தை வர்த்தமான், இவரும் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.