சுட்டெரிக்கும் சூரியன்.. கோவில்களில் இலவச நீர் மோர்.. பக்தர்களுக்கு சேகர்பாபு ஜில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் நாளை முதல் இலவசமாக நீர் மோர் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கோயிலுக்குள் கருங்கல் பதிக்கப்பட்ட பகுதிகளில் தரைவிரிப்பு போடப்படும் என்றும், நீர் மோர் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
கோடை காலங்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர், பானகம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இப்போதே அனல் தகிக்க ஆரம்பித்து விட்டது. கோவில்களில் கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும்.
பள்ளி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கோடை காலத்தில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு கோடை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் நடைபாதைகளில் சூரிய வெப்பத்தை தவிர்க்க குளிர்ச்சி தரும் வகையில் வெண்மை நிற வண்ணம் பூசப்பட வேண்டும் எனவும் தேங்காய் நார்களினால் ஆன தரைவிரிப்புகள் பக்தர்கள் நடக்கும் நடைபாதையில் அமைக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் நிழற்பந்தல் அமைத்து மின்விசிறிகள் பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications