வாகன ஓட்டிகளுக்கு செக்? நடைபாதை ஆக்கிரமிப்புக்கும் தடை? பாதசாரிகளின் பாதுகாப்பு.. சென்னை ஹைகோர்ட நச்
சென்னை: பாதசாரிகளின் பாதுகாப்பை நாடி, ஹைகோர்ட்டுக்கு சென்றிருக்கிறார், தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர்.. என்ன நடந்தது?
சாலை விதிகளை சரியாக பின்பற்றாதது, சாலைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் உயிரிழந்துவருகிறார்கள்.. இந்த இறப்பு எண்ணிக்கையானது வருடா வருடம் உயர்ந்தபடியே உள்ளது.

வாகன எண்ணிக்கை: நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. புதிய வகை வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள், சாலை விதிகளை மதிப்பதிலும், வாகனங்களை சீராக இயக்குவதிலும் முழுமையான கவனத்தை செலுத்துவதில்லை.. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன..
வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, உடன் பயணிப்பவர்களும், சக வாகன ஓட்டிகளும், சாலையோரம் நடந்து செல்லும் அப்பாவி பாதசாரிகளும் விபத்துகளில் சிக்குகிறார்கள்.. சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடந்தாலும், பல்வேறு இடங்களில் பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்பதே பரவலான புகாராக உள்ளது.
கூகுள் மேப்: கடந்தவாரம்கூட, கூகுள் மேப்பை நம்பி, முட்டுச்சந்துக்குள் காரை ஓட்டிச்சென்ற வட மாநில பெண் ஒருவர், வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த பெண்கள் மீது காரை ஏற்றிய சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் சென்னையில் அடங்கவில்லை. எனவே, முட்டுச்சந்துகளிலும் கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.. அந்த பொதுநல மனுவில் அவர் சொல்லி உள்ளதாவது:
'சாலை விபத்துக்களில் பலியாகும் 10 பேரில் 9 பேர் பாதசாரிகள் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதனால் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
மெட்ரோ ரயில்: சென்னையில் பல இடங்களில் பிரதான சாலைகளில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தடுப்புகளை ஏற்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம் பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக உள்ள நடைபாதைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் மற்றும் வாகன நிறுத்து மிடங்களாக மாறியுள்ளன.
இருசக்கர வாகன ஓட்டிகளும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். பேருந்து நிறுத்தங்களும் மாற்றப்பட்டுள்ளதால் பல இடங்களில் நிழற்கூரைகள் இல்லை.
பாதசாரிகள்: எனவே, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை அமைக்கவும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.டி.ஆஷா, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 29-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். மிக மிக முக்கியமான வழக்கு என்பதால், இதன் நீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications