காதல் என்றால் என்ன? பிளேட்டோ சொன்ன ஃபார்முலா இதுதான்! நீங்களும் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இருப்பினும் காதல் குறித்து பலருக்கும் பல புரிதல்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் தத்துவவியலாளர் பிளேட்டோ சொன்ன விஷயம் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
காதல் என்றால் என்ன? இதற்கான ஃபார்முலா இதுதான் என்று பிளாட்டோ சொல்லியிருப்பதாக நெட்டிசன்கள் சில விஷயங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

பிளேட்டோ சொன்னது இதுதான்
பிளேட்டோ இளைஞராக இருந்தபோது, தனது ஆசிரியரிடம்.. "ஆசானே! காதல் என்பது என்னவோ?" என கேட்டிருக்கிறார். உடனே ஆசான், பிளேட்டோவின் கையை பிடித்துக்கொண்டு அருகில் இருந்த கோதுமை வயலுக்கு அழைத்து சென்றிருக்கிறார். "மகனே பிளேட்டோ.. நீ இந்த வயலிலிருந்து நல்ல இளம் தண்டு ஒன்றை பறித்து வரவேண்டும். ஆனால் எக்காரணத்தை கொண்டும் திரும்பி பார்க்க கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.
நம்மாளு பிளேட்டோ.. விஷயம் இவ்வளவுதானே! இப்போ பாருங்க எப்படி வரேன்னு, என சொல்லிவிட்டு வயலுக்குள் இறங்கியிருக்கிறார். முதல் வரிசையில் இருந்த தண்டு பிரமாதமாக இருந்திருக்கிறது. ஆனால் அடுத்த வரிசையில் இருந்த தண்டு, இதை விட அற்புதமாக இருக்கும் போலிருந்திருக்கிறது. எனவே, இரண்டாவது வரிசைக்கு பிளேட்டோ போனார். அங்கு போய் பார்த்தால்தான் இன்னும் முன்னாடி உள்ள வரிசையில் உள்ள தண்டு இதை விட அட்டகாசமாக இருக்கும் போல இவருக்கு தெரிந்திருக்கிறது.
மனுஷன் இப்படியே ஒவ்வொரு வரிசையையும் கடந்து, கடைசி வரிசைக்கு வந்து, இறுதியில் எதையும் பறிக்காமல் அரை மணி நேரம் கழித்து வந்திருக்கிறார். என்னப்பா பிளேட்டோ? ஏதாவது கிடைச்சதா? என்று ஆசிரியர் கேட்க.. பிளேட்டோவே எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டார்.
"ஒன்னுமில்ல வாத்தியாரே.. முதல்ல பார்த்த தண்டு பக்காவாக இருந்துச்சு. ஆனா அடுத்த வரிசை அதைவிட மாஸாக இருந்தது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி போயிட்டேன். நீங்க வேற திரும்பி பார்க்க கூடாதுன்னு சொல்லீட்டீங்க. அதனால எதையும் பறிக்க முடியல" என்று கூறியுள்ளார். காதல் என்பது இதுதான் மகனே! என ஆசிரியர் கூறியதாக சொல்லப்படுகிறது.
சரி உண்மையில் காதல் என்றால் என்ன? ஏன் காதல் எல்லோருக்கும் ஒரு மர்மமாகவே இருக்கிறது. காதலை கைப்பற்ற தேடுகிறார்கள், அலைகிறார்கள், போட்டியிடுகிறார்கள், ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கிடைத்த பின்னர் அடைத்து வைக்கிறார்கள். அடைத்து வைப்பதுதான் காதலா?
சினிமாக்களில் காட்டுவதை போல பெண்களை பின்தொடர்ந்து சென்று, ப்ரபோஸ் செய்வதுதான் காதலா? பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் பழிவாங்குவதும், அவள் முன்னாடி எப்படி வாழ்ந்து காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொள்வதும்தான் காதலா?
காதலிக்கும்போது அவளை/அவனை ஏன் பிடிக்கிறது? என எப்போதாவது யோசித்தது உண்டா? ஒரு நிமிடம் யோசியுங்கள். அவள் அவளாகவும்/அவன் அவனாகவும் இருக்கும்போதுதான் உங்களுக்கு பிடிக்கிறது. ஆனால் காதலித்த பின்னர் அவளுக்காக நீங்களும், உங்களுக்காக அவளையும் மாற்றுவது காதலின் பரிபூரணத்தை கெடுத்துவிடுகிறது.
உண்மையில் நீங்கள் காதலின் முழுமை எட்ட வேண்டும் எனில், நீங்கள் நீங்களாவும், உங்கள் காதலியை அவராகவும் வாழ விடுங்கள். அப்புறம் பாருங்க அடுத்த ரோமியோ ஜூலியட் ஜோடி நீங்கள்தான்.
காதலை பற்றிய உங்களின் கருத்துக்களையும் கமென்ட் செய்யுங்க வாசகர்களே!












Click it and Unblock the Notifications