ரூ.10 ஆயிரம் செக் கொடுத்து பிரச்சாரம்: அதிமுகவினர் மீது நடவடிக்கை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை: ரூபாய் 2,000, ரூபாய் 10,000 காசோலை போல அதிமுக துண்டு பிரசுரம் வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஊழல் தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கு வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் போடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ரூ. 10,000 வழங்கப்படும் எனக் கூறி, காசோலை வடிவில் வடிவமைக்கப்பட்ட பணக் கூப்பன்களை அதிமுகவினர் விநியோகித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற்றால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுகவினர் காசோலை வடிவில் வடிவமைக்கப்பட்ட காசோலை கூப்பன்களை வாக்காளர்களிடம் விநியோகித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில இடங்களில் இதனால் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பெருங்குடியைச் சோ்ந்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிப்பின்போது, வாக்காளர்களுக்கு அவர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
அதில், ரூ.2,000 மற்றும் ரூ.10,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ள காசோலை மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுகவுக்கு வாக்களித்தால் பணப் பலன்கள் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது தவறானது. இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால், தோ்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள்.
எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். துண்டுப் பிரசுரங்களில் காசோலை மாதிரிகளை அச்சிட்டு விநியோகிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications