"செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறு.. பதவிநீக்கம் செய்யணும்!" சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் அளித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பலரும் புகார் அளித்தனர். அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் இது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. பல மணி நேரம் அந்த ரெய்டு நீடித்த நிலையில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி: இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு ஆப்ரேஷனும் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் சிறைக்கு மாற்றப்பட்டார். இடையில் அவர் ஜாமீன் கோரி பல முறை முயன்ற போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ச்சியாகச் சிறையிலேயே இருந்து வருகிறார்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த செப். 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட், அதேநேரம் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிக்கத் தான் வேண்டுமா என்பதே முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
மேல்முறையீடு: இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தார்மீக காரணங்களால் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரக் கூடாது என்று ஆளுநர் ரவி எழுதிய கடிதம் திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்தும் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் எம் எல் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மேல்முறையீட்டை செய்திருந்தார்.
முன்னதாக சென்னை ஐகோர்ட், "அரசியலமைப்புச் சட்டமோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமோ ஒருவர் காவலில் இருந்தால் அல்லது அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டாலே அவரை தகுதி நீக்கம் செய்வதாகக் கூறவில்லை" என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்து கடந்த ஜூன் 29இல் எழுதிய கடிதத்தை மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உதவாது: இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், அது சரியா என மனுதாரர் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் இது எதற்கும் உதவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவலில் உள்ள அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யச் சட்டம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது சரியானது இல்லை என்றும், இதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்றும் வரையில் தற்காலிக தீர்வை நீதிமன்றம் தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications