தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது.. 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
சென்னை: தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு இன்று காலை தொடங்கியது. இந்த தேர்வில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
Recommended Video
2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பழைய பாடத்திட்டத்தில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 10 ஆயிரத்து 683 தனித் தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) பழைய பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்து 828 தனித்தேர்வர்களும், புதிய பாடத்திட்டத்தில் 2 ஆயிரத்து 655 நேரடி தனித்தேர்வர்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 பேர். மாணவிகள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 பேர். மாணவிகளை விட மாணவர்கள் 66 ஆயிரத்து 865 பேர் அதிகம். தனித்தேர்வர்களில் 6,581 பெண்களும் 12,583 ஆண்களும் மற்றும் 2 திருநங்கைகளும் தேர்வு எழுத உள்ளனர்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட எதையும் எப்போதும் செய்ய தயார்- ரஜினிகாந்த் ட்வீட்
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய மையங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.