ED-யை நானா உருவாக்கினேன்? ஊழலுக்கு எதிரான என் பயணம் நிற்காது.. விமர்சனங்களுக்கு மோடி பரபர பதில்!
சென்னை: ED மூலம் எதிர்க்கட்சிகளை குறி வைப்பதாக பாஜக அரசு மீது தொடர்ச்சியாக வைக்கப்படும் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக அதிகளவில் அமலாக்கத்துறை சோதனைகள், கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக பாஜக அரசு ED-ஐ ஏவுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்துப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

குற்றச்சாட்டு பற்றி மோடி பதில்: சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள், எதிர்க்கட்சிகளை நசுக்க இவற்றை பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "ED பற்றி பேசுவோம். அமலாக்கத்துறை என்ன எங்களால் உருவாக்கப்பட்டதா? சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் PMLA நாங்கள் உருவாக்கியதா? இல்லை. முதலில் இருந்தே அதெல்லாம் இருக்கிறது.
ED ஒரு சுதந்திரமான அமைப்பு. அது சுதந்திரமாக வேலை செய்கிறது. அதை நாங்கள் தடுப்பதும் இல்லை. யார் மீதும் ஏவுவதும் இல்லை. நீதிமன்றங்களின் தராசுகள் தான் அதன் செயல்பாட்டை மதிப்பிட முடியாது. எங்களுக்கு நேரடியாக அமலாக்கத்துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. இப்போது ED வசம் சுமார் ஏழாயிரம் வழக்குகள் உள்ளன. அவற்றில் அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகள் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
நாங்களா ED-யை உருவாக்கினோம்?: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ED கைப்பற்றிய பணம் 35 லட்சம் மட்டுமே. முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சியிலும் இதே ED செயல்பட்டது. அப்போது அவர்கள் பிடித்த பணம் 35 லட்சம் மட்டுமே. ஆனால், இந்த ஆட்சியில் ED பிடித்துள்ள பணம் 2,200 கோடி. இதன் அர்த்தம் என்ன? இந்த அமைப்பின் ரெய்டுகள் வெளியில் யாருக்கும் தெரியாது. அதனால் தான் இந்த பணம் பிடிபடுகிறது.
ED ரெய்டுகளில் பணம் மூட்டை மூட்டையாக பிடிபடுகிறது. பணத்தை வாஷிங் மெஷின்களில், வீட்டுக்கு தண்ணீர் செல்லும் பைப்புகளில் கத்தை கத்தையாக பதுக்கி வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி ஒருவர் வீட்டில் இருந்து 300 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பண மூட்டைகள் எடுக்கப்பட்டன. இதையெல்லாம் நாட்டு மக்கள் சகித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா? இந்த அசிங்கம் நீங்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
யாருடைய பணம்?: இதெல்லாம் யாருடைய பணம்? டிரைவர் வேலை வாங்கித் தருகிறேன். டீச்சர் வேலை வாங்கித் தருகிறேன் எனச் சொல்லி மக்களிடம் பணம் வாங்கி சேர்த்த பணம் இது. நான் சில சட்ட வழிமுறைகளை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யார் யாரெல்லாம் அவர்களுக்கு பணம் கொடுத்தார்களோ அந்தப் பணத்தை எல்லாம் அவர்களுக்கு திருப்பித் தர முடியுமா என நான் முயற்சி செய்து வருகிறேன்.
நாங்கள் கைப்பற்றிய பணத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே திருப்பிக் கொடுத்துவிட்டோம். இந்த தேடலில் முடிவு கிடைத்ததும் யாருக்கு தொடர்பு இருக்கிறதோ, இந்த பணம் எங்கிருந்து வந்ததோ, அவரவர் பணத்தை அவர் அவருக்கே திருப்பி கொடுத்து விடுகிறோம். மக்கள் அதைப் பாராட்டுகிறார்கள்.
அமலாக்கத்துறை எல்லோருக்கும் ஒன்று தான்: யாராக இருந்தாலும் ED-யை பொறுத்தவரை ஒரே நடைமுறை தான். நாங்கள் இந்த வழக்கை முடித்துள்ளோம் என ஒரு உதாரணம் காட்ட முடியுமா? ED தானாக முன்வந்து வழக்கு தொடர முடியாது. நாட்டில் ஏதாவது ஒரு அமைப்பில் வழக்கு பதிவு செய்திருந்தால் அதைத் தொடர்ந்து தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.
PMLA சட்டத்தை முடக்க 150க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. எல்லாமே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ED வேலை செய்யக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும். ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை நிற்காது என அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் ED செயல்பாட்டை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்தலாம் எனப் பார்க்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications