வெள்ளை சட்டை, வேஷ்டியில் தூத்துக்குடியில் பிரதமர் மோடி.. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்
சென்னை: இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினார். புதிதாக அமைக்கப்பட்ட ஓடுதளத்தில் அவரது விமானம் தரையிறங்கியது.தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் ரூ.4900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி வந்தடைந்தார். அமைச்சர் கே என் நேரு, துரை வைகோ பிரதமர் மோடியை வரவேற்றனர். நாளை கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை மோடி வெளியிடுகிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க இருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகத்தை வகுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடியின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

மாலத்தீவு, பிரிட்டனுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றிருந்த மோடி, இன்றிரவு 7.30 மணிக்கு மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். தமிழக பாரம்பரியப்படி வெள்ளை சட்டை, வேஷ்டியில் அவர் வந்தார். விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பொன்னாடை போர்த்தை வரவேற்றார்.
மத்திய அமைச்சர் எல் முருகனும் மோடியை வரவேற்றார். மோடிக்கு அரசு சார்பாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட முனையத்தை இரவு 8 மணி அளவில், மோடி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்ற பிரதமர், ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன், மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்வை முடித்த பின்னர் இரவு 10.30 மணி அளவில் தனி விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு வந்தடைந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் கே என் நேரு, துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பிறகு அங்கு ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, நாளை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அங்கு ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் வருகை தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் வருகையின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்திப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பு அதிமுக-பாஜக இடையேயான உரசல்களுக்கு தீர்வாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பு பின்னர் கூட்டணி ஆட்சி பஞ்சாயத்துகள் முடிவுக்கு வரும் என்றும், எடப்பாடியின் இரண்டாம் கட்ட பிரசார பயணத்தின் திட்டம், அதில் பங்கேற்கும் பாஜக தலைவர்கள் குறித்தும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications