ஆதித்யா எல் 1 வெற்றிப்பயணம்.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: சந்திரயான் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக விஞ்ஞான முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும்.
பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா -L1 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். முழு மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications