இலங்கைக்கு ரூ.123 கோடி மதிப்பில் உதவிய தமிழ்நாடு அரசு... உரையில் குறிப்பிடாமல் தவிர்த்த பிரதமர் மோடி
சென்னை: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் செய்யும் உதவியை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தமிழ்நாடு அரசு வழங்கிய உதவியை சுட்டிக்காட்டாதது விவாததை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” - 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
பிரதமர் மோடி
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.
Recommended Video
தமிழை புகழ்ந்த பிரதமர்
இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இதில் தமிழ்நாட்டுக்கான 6 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். "தமிழ்நாடு வருவது எப்போது மகிழ்ச்சிக்கு உரியதே. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது.
பொங்கல் விழா
சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார். அண்மையில் காது கேளாதோருக்கான குழுவினருக்கு எனது இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்தபோட்டியில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு. நாம் வென்ற 14 பதக்கங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர்களின் பங்கு இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
இலங்கை உதவும் இந்தியா
இலங்கை கடினமான சூழ்நிலையை கடந்துகொண்டிருக்கிறது. அங்கே இருக்கும் சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. நிதி உதவி, எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய உதவிகளை இந்தியா அளித்து வருகிறது. பல இந்திய அமைப்புகள், தனி நபர்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.
யாழ்பாண பயணம்
இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச அரங்கில் இந்தியா பேசி வருகிறது. ஜனநாயகம், ஸ்திரதன்மை, பொருளாதார மீட்பு தொடர்பாக இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும். இலங்கையின் யாழ்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்ற எனது பயணத்தை மறக்க முடியாது. யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. உடல்நலம், போக்குவரத்து, கலாச்சாரம் சார்ந்த உதவிகளை இந்தியா வழங்குகிறது." என்றார்.
தமிழ்நாடு அரசின் உதவியை தவிர்த்த மோடி
இந்த உரையில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு மத்திய அரசு செய்யும் உதவியையும், தனி நபர்கள், இயக்கங்கள் செய்யும் உதவியையும் சுட்டிக்காட்டினார். ஆனால், தமிழ்நாடு அரசு கப்பல் மூலமாக இலங்கைக்கு மத்திய அரசின் அனுமதியோடு வழங்கிய உதவியை குறிப்பிடாமல் அவர் தவிர்த்துவிட்டார். கடந்த 18 ஆம் தேதி ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 டன் மருந்து பொருட்கள் கப்பல் மூலமாக தமிழ்நாடு அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.