இன்று மிகப்பெரும் மாற்றம்.. புதிய தேர்தல் ஆணையர் யார்? தலைமை நீதிபதி இன்றி தேர்வு செய்யும் மோடி குழு
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற உள்ள நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பான கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பதிவிக் காலம் வருகிற ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளை சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. 3 வது முறையாக தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து உள்ளது.

பாஜகவை வீழ்த்தி 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. ஒருபக்கம் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி இருக்கும் நிலையில் மறுபக்கம் தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர்.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அனும் சந்திர பாண்டே வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார். இதனை அடுத்து புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான குழு இன்று கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர், மற்ற தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்தியாவில் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதற்கான குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு அதில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. அதன்படி தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய 2 கமிட்டிக்கள் உள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டு கேபினட் அமைச்சர் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவர் அல்லாமல் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரும் இந்த குழுவில் உள்ளார்கள். இந்த குழு தேர்தல் ஆணையரை தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். இது தேர்வுக் குழு என்று அழைக்கப்படுகிறது.
இந்த குழுவுக்கு செயலாளர் மட்டத்தில் உள்ள 2 அதிகாரிகளை கொண்ட தேடல் குழு 5 அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைக்கும். அவர்கள் பரிந்துரைத்த பெயர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்காக இன்று இரவு 7.30 மணியளவில் பிரதமர் இல்ல அலுவலகத்தில் தேர்வுக் குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications