மறக்க முடியாத கொடி காத்த குமரன்! பேசும் போதே கண் கலங்கிய பிரதமர் மோடி! எத்தனை உணர்ச்சிகரம்!
சென்னை: கொடி காத்த திருப்பூர் குமரன் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் பொங்க பேசினார். மேலும் ஆன்மீகம் குறித்து பேசிய போது அவர் கண்கலங்கினார்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் தனியார் தொலைகாட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்துடன் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக எனக்கு தொடர்பு இருக்கிறது. அதில் மறக்க முடியாத விஷயங்கள் உள்ளன. கன்னியாகுமரியிலிருந்து ஒரு முறை கேரளாவுக்கு போய்விட்டு மீண்டும் தமிழகத்திற்கு வந்தோம்.

ஈரோடுக்கு பக்கத்தில் திருப்பூரில் சுதந்திர போராட்டத்தில் தான் உயிரை கொடுத்த ஒரு தியாகி, திருப்பூர் குமரன். அதுவும் சிறிய வயதிலேயே உயிர்த் தியாகம் செய்திருந்தார். அவருடைய குடும்பத்தில் இருந்து 90 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரிய பெண்மணி வந்திருந்தார். அவர் எனக்கு ஆசி வழங்க வந்திருந்தார்.
அந்த தியாகியின் சமாதிக்கு போய் நாங்கள் மரியாதை செலுத்தினோம். அப்போது அந்த பெண்மணி காட்டிய உணர்ச்சி இருக்கே! அப்பப்பா, அவர் அந்த தியாகிக்கு என்ன உறவு என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அந்தம்மா காட்டிய உணர்ச்சியும் ஆசியும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. குமரன் செய்த தியாகத்தை பார்த்து அந்த தாய் எவ்வளவு பெருமைப்பட்டார் என்பதை அன்று நான் உணர்ந்தேன்.
இன்னொரு சம்பவம்- நாங்கள் ஏக்தா யாத்திரை சென்றோம். ஒருவர் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் வெறும் கோமணம் மட்டுமே அணிந்திருந்தார். "எங்களை நில்லுங்கள்" என நிறுத்தினார். நாங்கள் கான்வாயை நிறுத்தி என்னவென கேட்ட போது எங்கள் கையில் 11 ரூபாய் கொடுத்தார்.
நாங்கள் செல்வது ஆன்மீக பயணமா என்பதெல்லாம் அவருக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் காஷ்மீர் போகிறோம் என்பதுமட்டும் தான் அவருக்கு தெரியும். அவருக்கு தெரிந்தது, ஒரு யாத்திரை காஷ்மீருக்கு போகிறது என்பது மட்டும்தான். அந்த யாத்திரையில் தன்னுடைய பங்களிப்பாக ஒரு 11 ரூபாய் இருக்க வேண்டும் என்பது எந்தவிதமான உணர்ச்சி! இப்படி உணர்வுபூர்வமான நிறைய விஷயங்கள் இருக்கின்றன, சொல்லிக் கொண்டே செல்லலாம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மோடிக்கு பிடித்த உணவு உப்புமா, பொங்கல் ஆகும்.
ஏக்தா யாத்திரை என்றால் தேசிய ஒருங்கிணைப்பு பேரணி என்று அர்த்தம். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வழியாக பயணித்து ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றுவது ஆகும். இது தேசிய ஒற்றுமைக்கான யாத்திரை, பிரிவினைவாதங்களை எதிர்க்கும் யாத்திரையாகும்.












Click it and Unblock the Notifications