ரஜினியை விடுங்க.. கமலுக்கும் அடிபோட ஆரம்பித்து விட்டதே பாஜக.. மோடி பேச்சை பார்த்தீர்களா!
கமல், ரஜினி குறித்து பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: ரஜினியை விடுங்க... கமல் கூட்டணிக்கு பிரதமர் மோடி அடி போட ஆரம்பித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து நிறைய மாற்றங்களை பாஜக கையில் எடுத்து வருகிறது. அதன்படி தோற்றுபோன, அல்லது பாஜக பின்னடைவை சந்தித்த மாநிலங்களில் தங்கள் வலிமையை அதிகப்படுத்தவும், அந்தந்த மாநிலங்களில் காலூன்றவும் பல வியூகங்களையும் எடுத்து வருகிறது.
அதன்படிதான் ரேபரேலிக்கு சென்றது, கேரளாவுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட போவது எல்லாம். அதில் ஒன்றுதான் தமிழகம் வருகையும். இதற்கான அச்சாரம் வண்ணாரப்பேட்டை 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவின்போதே வெளிப்பட்டுவிட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை
ஜனவரியில் தமிழகம் வரும்போது, 3 நாள் பிரச்சாரம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் போன்ற நிகழ்வுகளுடன் தங்கள் கட்சியின் கூட்டணியையும் அச்சமயத்தில் அறிவிப்பதாகவும் பாஜக சொல்லி உள்ளது. இந்த நிலையில்தான், மோடி ரஜினி, கமல் குறித்த தன் கருத்தை கூறியுள்ளார்.
திட்டம் உள்ளதா?
ஒரு தனியார் டிவி நிறுவனத்துக்கு பிரதமர் ஒரு சிறப்பு பேட்டி தந்திருக்கிறார். அந்த பேட்டியின்போது, தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், ரஜினிகாந்த், கமல்ஹாசனை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
வரவேற்பீர்களா?
அதற்கு மோடி, "பாஜகவின் அடித்தளத்தை விரிவுபடுத்தி வருகிறோம். எங்களுடன் யார் வர விரும்பினாலும் அவர்களை சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம், பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் நோக்கில் இதனை முன்னெடுத்து வருகிறோம். அந்த அடிப்படையில் ரஜினி, கமலுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக உள்ளோம்" என்று பதிலளித்து உள்ளார்.
பாஜக பிம்பம்
ரஜினி, கமல் குறித்து பிரதமர் மோடி என்னவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறார் என்பது நமக்கு புரியவில்லை. ரஜினி பற்றி சொல்லவே வேண்டாம், சந்தேகமே வேண்டாம். பாஜகவின் பிம்பமாகவே ஒளிர்ந்து வருகிறார். அதனால் வரும் தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைப்பதாகவே இருந்தாலும் ரஜினி அந்த பக்கம்தான் தனது ஆதரவை தருவார்.
கிளீன் இந்தியா
ஆனால் பாஜக என்றாலே, அதாவது இந்துத்துவா என்றாலே கமலுக்கு ஆகாது. கிளீன் இந்தியாவில் விளம்பர தூதராக 9 பேரில் சச்சின் டெண்டுல்கரை போல சேர்த்ததுகூட மாநிலத்தின் புகழ்மிக்க ஒரு நபர் என்ற முறையில்தான். இந்த அறிவிப்புக்கு பிறகு கமலுக்கு நிறைய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.
ஆதரிக்கவில்லை
மாநில அரசு மீது குறையாக சொல்லும் கமல், மத்திய அரசை ஒருமுறை கூட விமர்சித்து கருத்து சொல்லவில்லை என்று பகிரங்கமாக சொல்லப்பட்டது. ஆனால் எதிர்க்கிறாரோ இல்லையோ, மத்திய அரசை ஆதரிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகி வருகிறது.
மோடி ஏன் வரவேற்கிறார்?
சமீபத்தில் ராகுலை சந்திக்க டெல்லி சென்றபோதுகூட பிரதமரை சந்திக்காமல்தான் கமல் திரும்பி வந்தார். எனவே பிரதமரின் கருத்து கமலுக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பது தெரியவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தரப்பினரை கமல் நிறையவே ஆதரிக்கிறார் என்று தெரிந்தும், மோடி கமலை வரவேற்றிருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.