கன்னியாகுமரியின் பல வருட கனவு.. இந்த மாதமே நிறைவேறுது.. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு குஷியான நியூஸ்
சென்னை: பிரதமர் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, 20 ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். அப்போது பல்வேறு திட்டங்களை மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதில், ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் - திருநெல்வேலி இடையேயான ரயில் பாதை திட்டமும் ஒன்று என தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்ட பயணிகளின் பல வருட கனவு திட்டமான இந்த இரட்டை ரயில்பாதை திட்டம் பயன்பாட்டிற்கு வர உள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருப்பு பாதை வழித்தடங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். கன்னியாகுமரி தொடங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை உள்ள இந்த வழித்தடம் மிக முக்கியமானதாக உள்ளது.
இரட்டை ரயில் பாதை: ஏனெனில், பணி நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இப்பகுதி மக்கள் அதிகம் பயணித்து வருகிறார்கள். இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களில் எபோதும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடியும். இதனால், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஆனாலும் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வாஞ்சி மணியாச்சி வரை இரட்டை வழித்தடம் இல்லாதததால் கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. தற்போது, சென்னையில் இருந்து மதுரை வரை உள்ள 490 கி.மீ பாதை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சோதனை ஓட்டம் முடிந்தது: நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள பாதையை இருவழிப்பாதையாக மாற்ற மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி வரை 159 கி.மீட்டர் தூரம் வரை ஒரு திட்டமாகவும், வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் வரை 102 கிலோ மீட்டர் ஒரு திட்டமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி இடையே இரட்டை ரயில்வே பாதை பணிகள் முடிவடைந்தன. வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையிலான பணிகளும், கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகளும் முடிவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது.
மோடி திறந்து வைக்கிறார்: தென் மாவட்ட இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்து உள்ளதால், கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது இந்த வழித்தட பணிகள் முடிந்து தயாராக உள்ளதால், வரும் 20 ஆம் தேதி பிரதமர் மோடி இரட்டை ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டை ரயில்பாதை திட்டம், நாகர்கோவில் டவுன் - நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி இடையே முடிக்கப்பட்ட இரட்டை ரயில்பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பயணிகள் மகிழ்ச்சி: மிக முக்கியமான இந்த வழித்தடம் இரட்டை வழித்தடமாக மாறும் பட்சத்தில் பயணிகளின் பயண நேரமும் கணிசமாக குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரட்டை வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல பயண நேரம் ஒரு மணி நேரம் வரை மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பயணிகள் மட்டும் இன்றி கேரளாவின் தென்பகுதி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாக ரயில் பயணிகள் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications