பிரதமர் மோடி சொன்ன ‘திருக்குறள்’.. விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்றது தமிழ்நாடு என பேச்சு!
சென்னை : சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடிக்கு, நினைவுப் பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளனர். விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார். ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, "பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். அவரது நோக்கத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். தங்கள் மீதான தடைகளை பெண்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர். விவேகானந்தர் வலியுறுத்திய பெண்கள் முன்னேற்றத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்ற இடம் தமிழ்நாடு" என்றார்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இதையடுத்து விவேகானந்தர் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்துக்குச் சென்று 30 நிமிடங்கள் தியானம் செய்கிறார். பிரதமர் மோடி விவேகானந்தர் இல்லத்துக்கு வருவதால் இன்று பிற்பகல் முதல் விவேகானந்தர் இல்லத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகையையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு மணல் பரப்பு முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களிலும் போலீசார் ஏறி நின்று பைனாகுலர் மூலமாக கண்காணித்தனர்.












Click it and Unblock the Notifications