மோடி வழியில் விஜய்? அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி.. கடுமையாக விளாசிய விசிக எம்.பி
சென்னை: "அம்பேத்கரை ஒரு பண்டமாக, வழிபாட்டு பொருளாக மாற்றி ஆதாயம் தேடும் அரசியலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்திலும் ஒரு சிலர் அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர்." என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சீண்டியுள்ளார் விசிக எம்.பி ரவிக்குமார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் பேரனும், சமூக செயற்பாட்டாளுமான ஆனந்த் டெல்டும்டே, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், விசிக துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க இருப்பதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தான் இந்த நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார் திருமாவளவன். தன்னை வைத்து திமுக கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்த சதி நடப்பதால், இந்த நிகழ்வில் பங்கேற்பதை தவிர்ப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசியது மிகப்பெரிய அளவில் விவாதமாகியுள்ளது. "திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி பிரஷர் இருப்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அவர் இன்று இங்கு வராவிட்டாலும் மனசு முழுக்க முழுக்க இங்கு நம்முடன் தான் இருக்கும்" என்று பேசி இருந்தார்.
மேலும், இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்து விட்டனர். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடம் இல்லை" என்று பேசினார்.
இந்தப் பேச்சுகள் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விட்டுள்ளன. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு விசிகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவனும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு முற்றிலும் தவறானது எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் பேரனும், சமூக செயற்பாட்டாளுமான ஆனந்த் டெல்டும்டே, பொருளாதார நிபுணரும், மாநில திட்டக்குழு செயல் துணை தலைவருமான ஜெயரஞ்சன், மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி, "அம்பேத்கர் எந்த இடத்தில் இருப்பது பெருமை தருமோ அந்த இடத்தில் இன்று இருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு பண்டமாக, வழிபாட்டு பொருளாக மாற்றி அதன் மூலம் ஆதாயம் தேடும் அரசியலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஒரு புறம் அம்பேத்கரை வணங்கிக் கொண்டே, இன்னொரு புறம் அவர் அமைத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை தகர்த்துக் கொண்டிருப்பவர் தான் பிரதமர் மோடி. அந்த மோடி மாடல் நாடு முழுவதும் பல இடங்களில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது அதேபோல் தமிழகத்திலும் ஒரு சிலர் அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விசிக எம்.பி ரவிக்குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட தவெக தலைவர் விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் தற்போது விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications