லிஸ்ட் பெருசா இருக்கே.. மோடியின் புதிய அமைச்சரவைக்கு முதல் சவால்கள்.. தமிழகத்தில் இருந்துதான்
சென்னை: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவை சந்திக்கப் போகும் முதல் சவாலே தமிழகத்தில் இருந்தே வரப்போகிறது. என்னவென்று கேட்கிறீர்களா, மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், 8வழிச்சாலை, காவிரி பிரச்சனை, நீட் தேர்வு, நியூட்ரினோ, இணையம் துறைமுகம், ஸ்டெர்லைட் என நீளமான பட்டியல் உள்ளது.
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.
ஆனால் இந்தியா முழுவதும் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. இங்கு வெற்றி பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் மோடி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான கெயில், ஹைட்ரோ கார்பன், 8வழிச்சாலை, நீட் தேர்வு, உள்பட பல்வேறு விஷயங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எனவே இந்த அமைச்சரவையில் யார் யார் இடம் போகிறார்கள், என்ன துறைக்கு அமைச்சராகப் போகிறார்கள் என்பதை தாண்டி துறை வாரிய அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்துதான் இந்தமுறை முதல் சவாலையே சந்திக்க போகிறார்கள். அப்படி என்ன என்ன சவால்கள் என்பதையும் அதற்கான துறைகளையும் இப்போது பார்த்து விடுவோம்.

பெட்ரோலிய துறை
தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. மேலும் இதற்கு தமிழக கட்சிகளிடையே எதிர்ப்பு உள்ளது. இதன் காரணமாக பெட்ரோலிய துறை அமைச்சகம் இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்தில் கடும் சவாலை சந்திக்கும்.

கடும் எதிர்ப்பு
இதேபோல் காவரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. கதிராமங்கலத்தில் நடந்து வரும் ஆய்வுக்கு அந்த ஊரில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த திட்டங்களுக்கு பாஜகவை தவிர எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது பெட்ரோலிய துறை அமைச்சகத்துக்கு கடும் போராட்டம் இருக்கும்.

சேலம்-சென்னை சாலை
சேலம்-சென்னை இடையே பசுமை வழிச்சாலை, அதாவது எட்டுவழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவும் இந்த திட்டத்துக்கு எதிராக உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியும் 8வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அதேநேரம் மத்திய அரசும் தமிழக அரசும் 8வழிச்சாலையை உறுதியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. எனவே இத்திட்டத்தை நிறைவேற்றுவது மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடும் சவாலாக இருக்கும்.

நீட்டுக்கு கடும் எதிர்ப்பு
தமிழகத்தில் உள்ள பிரச்சனையை மத்தியில் ஆளும் கட்சிகள் புரிந்து கொள்ளாமல் போன் முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ஏன் நீட் தேர்வை தமிழகத்தில் எதிர்க்கிறார்கள் என்றால், ஒரே பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் தமிழக பள்ளி கல்வி பின்பற்றவில்லை.ஒரே பாடத்திட்டத்தை உருவாக்காமல் நீட் தேர்வை திணித்ததால் எதிர்க்கிறார்கள். மற்ற மாநில்ங்கள் எதிர்க்காததுக்கு காரணம் பாடத்திட்ட முறைகளே காரணம். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய திமுக கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்கும். இதனால் நீட் தேர்வு விஷயத்தில் நிச்சயம் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சவால் காத்திருக்கிறது.

குமரியியில் எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் இணையம் துறைமுகத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்ததிட்டத்தை செயல்படுத்த அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே கப்பல் துறை அமைச்சருக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் சவாலாக இருக்கும்.

காவரி நீர் பிரச்சனை
காவிரி டெல்டா மாவட்டங்களில் வளம் கொழித்து வந்த காவிரி தாய் பல ஆண்டுகளாக மழை வரும் போது மட்டுமே மொத்தமாக வருகிறாள். மற்ற நேரங்களில் கர்நாடகாவால் தடுக்கப்படுகிறாள். என்னதான் காவிரி ஒழுங்காற்று வாரியம். இவ்வளவு தான் தண்ணீர் என இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டாலும், தண்ணீர் திறப்பில் இருமாநிலங்களிலும் பிரச்னை நிலவுகிறது. இதனால் மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் வழக்கம் போல் கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களால் பஞ்சாயத்துகளை சந்திக்கும்.

ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் தொழிற்சாலையை தமிழக அரசு மூடி சீல்வைத்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு போட்டுள்ளது. ஒருவேளை நீதிமன்ற உத்தரவால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டால், அதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications