கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்! ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை : கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே வியாசர்பாடி சேர்ந்த பிரியா கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டதோடு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் இந்திய அணியில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

கால்பந்து வீராங்கனை
அப்போது அவரது வலது கால் மூட்டில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறியதோடு மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சில நாட்களில் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டதோடு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதும் அதனால் கால் வீங்கிலும் தெரியவந்தது.

உயிரிழப்பு
இதை அடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி கால்பந்து வீராங்கனையான அவரது வலது கால் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டதாக உறவினர்கள் கூறிவந்த நிலையில் இன்று காலை பிரியா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தவறான சிகிச்சையே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்ட பதிவில்," சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ரூ.1 கோடி இழப்பீடு
விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல... அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications