ராஜ்யசபா தேர்தல்- பாமக, பாஜக ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்! ஓகே சொன்ன டாக்டர் ராமதாஸ், அண்ணாமலை!
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தலில் அதிமுகவின் வேட்பாளருக்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்கள் என அக்கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது.
ராஜ்யசபா எம்.பிக்கள், சட்டசபையில் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதனடிப்படையில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பிக்கள் கிடைக்கும்.
பாஜக ஆதரவு
திமுக தமது 3 வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. எஞ்சிய ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கி உள்ளது. அதிமுக தமக்கான 2 எம்.பி இடங்களுக்கு கூட்டணி கட்சியான பாஜக ஆதரவை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக மூத்த தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம், அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளது என்றார்.
ராமதாஸுடன் சந்திப்பு
இதேபோல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பாமகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்கள்.
அதிமுக கடிதம்
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை மருத்துவர் ராமதாஸிடம் ஒப்படைத்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினரும் கேட்டுக் கொண்டனர்.
பாமக ஆதரவு
அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மருத்துவர் ராமதாஸ், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.மணி கூறியுள்ளார்.