பாமகவுடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்துமா? அமைச்சர் ஜெயக்குமார் செம பதில்
Recommended Video
சென்னை: திமுக, அ.ம.மு.க ஆகிய இரு கட்சிகளை தவிர, விருப்பமுள்ள அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே கட்ட லோக்சபா தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் தேர்தல் ஆணையம் அதுபற்றி முடிவு செய்யும்.
இந்தியா முழுக்கவே, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தினால் சிறப்பானது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுக வேண்டாம்
அப்போது, "பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியுள்ளாரே" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், எங்களை பொறுத்தளவில், திமுக என்பது ஒரு தீய சக்தி. எம்ஜிஆர் இதை அன்றே கூறிவிட்டார். திமுக ஆட்சியால் ஊழல் பெருகியது, வளர்ச்சி இன்றி தமிழகம் கஷ்டப்பட்டது. எனவே திமுக என்பது எங்கள் எதிரி.
இரு கட்சிகள்
திமுக மற்றும் அ.ம.மு.க தவிர பிற யார் வந்தாலும் நிச்சயம் எங்களுக்கு எதிரி கிடையாது. தாராளமாக அவர்கள் எங்களுடன் வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர்களின் மக்கள் செல்வாக்கு உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்து, அதிமுக செயற்குழு, பொதுக்குழு இறுதி முடிவை எடுக்கும்.
பன்னீர்செல்வம் மகன்
ஓ.பன்னீர்செல்வத்தின், மகன், அதிமுகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றுள்ளதில் தவறில்லை. அவரும் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.
திண்ணைப்பேச்சு வீரர்
தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வருவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் தொடர்ச்சியாக இப்படி ஏதாவது சொல்லி வருகிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக காணாமல் போகும் என்றார். நடக்கவில்லை. ஆட்சி கலையும் என்றார், அதுவும் நடக்கவில்லை. எனவே இதுவும் நடக்காது. அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என நமது திண்ணைப் பேச்சு வீரர் பேசி வருகிறார். திண்ணைப்பேச்சு வீரர் திண்ணையில்தான் இருக்க முடியும், அரியணையில் ஏற முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.