Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷா குழுவின் இந்தி திணிப்பு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருக்கிறது. பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒற்றை மொழியை மட்டும் திணிக்க முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-ஆவது தொகுப்பில் இந்த பரிந்துரை இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும், அதாவது மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தியில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும்; இந்தியில் பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் இந்தியாவை இந்தி நாடாக மாற்றுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது. இது சரியல்ல.

ஒருமைப்பாடுக்கு ஆபத்து

ஒருமைப்பாடுக்கு ஆபத்து

இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியா தான் பல்வேறு பண்பாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தும் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாடு. இந்த சிறப்புகள் அனைத்துக்கும் காரணம் இந்திய மக்கள் அனைவரும் வழங்கப்பட்டிருக்கும் மொழி மற்றும் கலாச்சார சுதந்திரம் தான். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். இந்தியாவின் பெருமைகளாக கருதப்படும் ஒருமைப்பாடு, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவை பாதிக்கப்படக்கூடும்.

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் பரிந்துரைகள்

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் பரிந்துரைகள்

இந்திய மக்களில் 43.60 விழுக்காட்டினர் மட்டுமே இந்தி பேசுபவர்கள். மீதமுள்ள 56.40 விழுக்காட்டினர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை பேசுபவர்கள் தான். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. இந்தியாவில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழியாக ஆங்கிலம் இருப்பதால் தான் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. அதை மாற்றி, இந்தியை கட்டாய பயிற்று மொழியாக மாற்றினால், இந்தி பேசாத மாணவர்களால் பாடங்களை படிக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. ஆங்கிலத்தை விருப்ப பாட மொழியாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அதற்காக தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும் என்பதால் அது நடைமுறை சாத்தியம் அல்ல. மேலும், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களிலும் பெரும்பான்மையினர் இந்தி பேசாதவர்கள் தான். அவர்களாலும் இந்தியில் பயிற்றுவிக்க முடியாது என்பதால் மத்திய கல்வி நிறுவனங்களில் பெரும் குழப்பம் தான் ஏற்படும். இன்று மட்டுமின்றி என்றுமே இது தேவையில்லை.

மத்திய அரசு ஏற்க கூடாது

மத்திய அரசு ஏற்க கூடாது

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி தான் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; தேர்வுகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் எனபன போன்றவை தேவையற்றவை. பல மொழிகள் பேசும் நாட்டில் பயிற்று மொழிகளும், தேர்வு மொழிகளும் பரவலாக்கப்பட வேண்டுமே தவிர, குறுக்கப்படக் கூடாது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை இந்தியாவை முன்னேற்றுவதற்கு பதிலாக பின்னோக்கி இழுத்துச் சென்று விடும். ஆதலால், இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக் கூடாது.

தோற்றுப் போன இந்தி திணிப்பு முயற்சி

தோற்றுப் போன இந்தி திணிப்பு முயற்சி

இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி நாடு விடுதலை அடைந்த காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 1959-ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அப்போதைய பிரதமர் நேரு, "இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும்" என உறுதியளித்தார். 1968-ஆம் ஆண்டின் இந்திய அலுவல் மொழிகள் சட்டத் திருத்தத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1976&-ஆம் ஆண்டின் அலுவல் மொழி விதி 11(2)-ன்படியும் மத்திய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மதிக்காமல் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக மாற்ற முயல்வது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதியையும், அலுவல் மொழிச் சட்ட விதிகளையும் அப்பட்டமாக மீறும் செயல் ஆகும்.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பு நேர மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மொழிகளும் சம அளவில் மதிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் உள்ளிட்ட தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+