பாட்டாளி மகன் கட்சி.. அன்புமணி பின்னால் அணி வகுத்த நிர்வாகிகள்! இறங்கி வந்த ராமதாஸ்.. அடுத்து என்ன?

தமிழகத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணியை பலப்படுத்த பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பாமக கூட்டணி பேச்சு வார்த்தையில் இடியை இறக்குவது போல தந்தை மகன் இடையேயான மோதல் நடந்திருக்கிறது. ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துவதாக அன்புமணி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கேற்றார் போல் கடந்த சில தினங்களாகவே செய்தியாளர் சந்திப்புகளை எழுதி வைத்ததை படித்து வருகிறார் ராமதாஸ்.
இதையே ஒரு ஆதாரமாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர். இந்நிலையில் அன்புமணியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது, வீட்டுக்குள் நடந்துவற்றையும் எடுத்துச் சொல்லி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்றில் இருந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். தற்போது பாமக பல்வேறு மாவட்டங்களாக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகிறார். அன்புமணி ராமதாஸின் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இன்று கூட திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் அவர்களை கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், அவர்கள் பதவியில் தொடர்வதாகவும் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புமணி பதில் அறிக்கை விட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க அன்புமணியையும் ராமதாசையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
ராமதாஸை அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர் சில முக்கிய நிர்வாகிகள். ஆனால் இந்த பிரச்சனைக்கு காரணமே ஜிகே மணி தான் என ஒருபுறம் குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில் தற்போது இரு தரப்பையும் சந்தித்து பேச வைக்க முயன்று வருவதாக ஜி.கே. மணி கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஜிகே மணி, அன்புமணி உடன் பேசவே மாட்டேன் என பிடிவாதமாக இருந்த ராமதாஸ் தற்போது சரி பார்க்கலாம் என தன்னிடம் கூறியதாகவும் விரைவில் இருவரும் சந்தித்து பேசுவார்கள் பிரச்சனைக்கு முடிவு வரும் எனக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் இறங்கி வர என்ன காரணம் என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. அதாவது ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்து நிர்வாகிகள் அன்புமணியின் ஆலோசனை கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே ராமதாஸின் பின்னால் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை பொதுக்குழுவை கூட்டினாலும் அன்புமணி ராமதாஸுக்கு தான் ஆதரவு கிடைக்கும், 40 ஆண்டுகளாய் வளர்த்த கட்சியை ஒரே நாளில் விட்டுத்தர ராமதாஸுக்கு விருப்பமில்லை. இதனால் மகன் அன்புமணியுடன் சமாதானமாக போய்விடலாம் என சில நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.
மேலும் கள யதார்தத்தை தெரிந்து கொண்ட ராமதாஸ் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்புமணியை சந்திக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரின் சந்திப்பும் இருக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் அன்புமணி இறங்கி வரும் வரை ராமதாஸ் வர மாட்டார் எனவும் நீக்குதல் சேர்த்தல் படலங்கள் தொடரும் என்கின்றனர் பாமகவினர்.












Click it and Unblock the Notifications