வன்னியர் இடஒதுக்கீடு- அதிமுக திட்டவட்டம்... 35 சீட் கேட்கும் பாமக.. அடுத்த வாரம் பாஜகவுடன் பேச்சு
சென்னை: வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிகபட்சமாக தேர்தல் அறிக்கையில் மட்டுமே சேர்க்க முடியும் என அதிமுக தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் கூட்டணி தொடர்பான அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலையில் பாமக உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக இடம்பெற்றுள்ளது. பாஜக தரப்பில் 60 தொகுதிகள் கேட்கப்பட்டது. அத்துடன் டெல்லி தலைவர்களுடன்தான் அதிமுகவால் இதுபற்றி பேச முடியும்.

பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கை
இதனால் பாமகவுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தினர். பாமகவைப் பொறுத்தவரை முதலில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரியது. தமிழக அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எம்பிசி கோட்டாவில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு தேவை என இறங்கி வந்தது பாமக.

தேர்தல் அறிக்கை- அதிமுக
இது தொடர்பாகவும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. பாமக, அதிமுக அமைச்சர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மிக அதிகபட்சமாக அதிமுக தேர்தல் அறிக்கையில்தான் இந்த கோரிக்கையை சேர்க்க முடியும் என சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் இதுதான் அதிமுகவின் நிலை எனவும் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.

பாமக கேட்கும் 35 தொகுதிகள்
இதனையடுத்து பாமகதான் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் அதிமுகவிடம் பாமக 35 தொகுதிகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக தரப்போ அதிகபட்சமாக 25 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளது. அதிமுக- பாமக இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு தொடர்பானதாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

பாஜக- அதிமுக பேச்சுவார்த்தை
இந்நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் கிஷ்ண ரெட்டி, விகேசிங் ஆகியோர் அடுத்த வாரம் தமிழகம் வருகை தருகின்றனர். முதல் கட்டமாக அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாமகவுக்கு எத்தனை தொகுதிகளோ அதே எண்ணிக்கை எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என பாஜக தரப்பு நெருக்கடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

தேமுதிகவுக்கு 9 சீட்?
பாஜக, பாமகவுக்கு பந்தி வைத்தது போக எஞ்சிய தொகுதிகள்தான் தேமுதிகவுக்கு என்கிற நிலையில் அதிமுக இருக்கிறது. தேமுதிகவோ 41 தொகுதிகள் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. தேமுதிகவுக்கு இம்முறை அதிமுக அணியில் 9 தொகுதிகளுக்குதான் வாய்ப்பு எனவும் அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் தேமுதிக விழிபிதுங்கி கொண்டிருக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களின் கருத்து.












Click it and Unblock the Notifications