அதிமுகவுடன் தான் கூட்டணி.. கேட்டை மூடிய அன்புமணி! திமுகவுக்கு தாவும் ஜிகே மணி&கோ? பரபர பாமக!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் லேசாக ஓய்ந்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி சின்னம் கொடி பெயர் ஆகியவை அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி சேர தயாராகி விட்டார். இந்த நிலையில் ஜிகே மணி உள்ளிட்ட சிலர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் பாமகவின் நிறுவனர் என்ற முறையில் தொடர்வார் எனவும், அதே நேரத்த் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக கூறினாராம் அன்புமணி. இதனால் ஏற்கனவே திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ஜி.கே.மணி உள்ளிட்டோர் திமுகவில் சேர தூது விட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழலில் அன்புமணி தரப்பில் மூன்று எம்எல்ஏக்களும், ராமதாஸ் தரப்பில் இரண்டு எம்எல்ஏக்களும் இருக்கின்றனர்.
ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர். திலகபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அன்புமணியின் பின்னால் இருக்கின்றனர். இப்படி பாமக இரண்டாக உடைபட்டு இருக்கும் நிலையில் அன்புமணியையும் ராமதாஸையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

பாமக பிளவு
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பும் அன்புமணி தரப்பும் அடுத்தடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டங்களை நடத்தியது. இருதரப்புமே தீர்மானங்களை நிறைவேற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தது. இதற்கிடையே அன்புமணி தான் உண்மையான பாமக எனவும் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தும் அதிகாரம் அன்புமணிக்கு தான் இருக்கிறது என தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டு அதற்கான ஆணையையும் வழங்கியதாக கூறினார் பாமக வழக்கறிஞரான பாலு.
அன்புமணி ராமதாஸ்
அதே நேரத்தில் நாங்கள் தான் உண்மையான பாமக என கூறி வருகிறது ராமதாஸ் தரப்பு. இதற்கிடையே ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் தமிழ் குமரனை பாமக ராமதாஸ் தரப்பு இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். அது செல்லாது என அன்புமணி தரப்பு கூறி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்வது உறுதியாகிவிட்டது. தற்போது தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் பாண்டா அன்புமணியை சந்தித்து பேசினார்.
ஜிகே மணி
இந்த நிலையில் ஜிகே மணி உள்ளிட்டோர் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். மேலும் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கடந்த காலங்களில் அவர்கள் திட்டமிட்டு செயலாற்றினர். ஆனால் அன்புமணி அதற்கு உடன்படாததால் ராமதாசை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர் அன்புமணி தரப்பினர். மேலும் சட்டசபையில் ஜிகே மணி, திமுகவுக்கு ஆதரவாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.
திமுக இணைப்பு
இந்த நிலையில் ஜிகே மணி உள்ளிட்ட சில நிர்வாகிகள் திமுகவில் சேர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிக எம்எல்ஏக்கள் சிலர் விஜயகாந்த் மீது அதிருப்தி அடைந்து திமுகவிலும் அதிமுகவிலும் இணைந்தனர். அந்த வகையில் அருண்பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரை குறிப்பிடலாம். இந்த நிலையில் அன்புமணி தனக்கு எதிராக செயல்பட்டவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக கூறி இருக்கும் நிலையில் ஜிகே மணி உள்ளிட்டோர் திமுகவில் இணையலாம் என கூறப்படுகிறது.
2026 தேர்தல்
இதற்கான மறைமுக பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு வேளை திமுகவில் நேரடியாக இணையாக விட்டாலும் திமுக ஆதரவு நிலைப்பாட்டின் மூலம் அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என கூறுகின்றனர் நம்மிடம் பேசிய மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சிலர்.












Click it and Unblock the Notifications