கோர்ட் முதல் கோயில் வரை.. தமிழ் இருக்கனும்! தமிழ்நாடு அரசு திட்டத்தை வரவேற்ற ராமதாஸ் - என்ன அது?
சென்னை: அரசு அலுவலகங்களில் நாள்தோறும் ஒரு திருக்குறள், தமிழ்ச்சொல் திட்டம் வரவேற்கத்தக்கது என்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் அரசாணையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர்," தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள் தோறும் ஒரு திருக்குறளை அதற்கான பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். ஆட்சி சொல்லகராதியில் உள்ள ஓர் ஆங்கிலச் சொல் மற்றும் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லையும் எழுதி வைக்க வேண்டும் என்று அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் ஆணையிட்டிருக்கிறார்.

அரசு அலுவலகங்களில் அன்னைத் தமிழை பரப்புவதற்கான இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் கலைச் சொற்களை எழுத வேண்டும் என்று கடந்த 2000 ஆவது ஆண்டிலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதை தவறாமல் கடைபிடிக்கும்படி தலைமைச் செயலாளரே நினைவூட்ட வேண்டிய நிலைமை தமிழ்நாட்டில் இருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் வாழ்வில் அனைத்திற்கும் முதலாவதாக அன்னைத் தமிழ் தான் இருக்க வேண்டும். அன்னைத் தமிழை அழிவிலிருந்து காப்பதற்காக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் ஏராளம். கடந்த பிப்ரவரி திங்களில் சென்னையிலிருந்து மதுரை வரை தமிழத்தேடி பயணத்தை நான் மேற்கொண்டிருந்தேன்.
அப்போது, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை 08.08.1977 ஆம் நாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 575-இன்படி தமிழ் மொழிக்கு முதன்மை இடம் வழங்கி அமைக்க வேண்டும் என்று அனைத்து வணிகர்களுக்கும் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையும், தமிழ் வளர்ச்சித் துறையும் அறிவுறுத்தின. ஆனாலும் அதன் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை; அவற்றை தமிழக அரசு தொடங்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடம், பட்டப்படிப்பு வரை தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி, நீதிமன்றங்களிலும், கோவில்களிலும் தமிழ், தமிழில் படித்தவர்களுக்கு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்குவற்கான சிறப்புச் சட்டம் என தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக கடைகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வலியுறுத்தி தமிழை தேடி என்று பெயரில் மதுரை நோக்கி யாத்திரை சென்ற ராமதாஸ், "முதல்கட்டமாக, மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் தமிழைத்தேடி இயக்கத்திற்கு பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் 10 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களாகவும், தமிழைப் பரப்புபவர்களாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்ற வேண்டியதன் தேவையை ஒவ்வொரு வணிகரும் உணரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வணிகர்களுக்கு வழங்குவதற்கான துண்டறிக்கை கட்சித் தலைமையால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூருக்கு தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று வழங்க வேண்டும்.
மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழி கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். அதற்காக, 'தனித்தமிழ் சொற்கள் அறிவோம்' என்ற தலைப்பில் தலைமை வடிவமைத்துக் கொடுத்த பதாகைகளை மக்கள் கூடும் இடங்களில் அமைக்க வேண்டும்." என மூன்ற கட்டளைகளை கட்சித் தொண்டர்களுக்கு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications