மத்திய அமைச்சரின் வாக்குமூலத்தை கேளுங்கள்.. டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்.. ராமதாஸ் பரபரப்பு ட்வீட்
சென்னை: குடி குடியை கெடுக்கும். மத்திய அமைச்சரின் வாக்குமூலத்தைக் கேளுங்கள். மதுக்கடைகளை மூடுங்கள் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார். அவரது வார்த்தைகள் உண்மையானவை!
மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2!

கொடுமை
இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்!

கவுசல் கிஷோர்
மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல.... நாளை அல்ல.. இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்!

மதுவால் நாடு சீரழிவதை தடுக்கும்
மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்! இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

சுல்தான்பூர்
உத்தரப்பிரதேசம் மாநிலம், சுல்தான்பூரில் உள்ள லம்புவா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற போதை மீட்பு தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் கவுசல் கிஷோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தனது வாழ்க்கையில் சந்தித்த சோகமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மது அருந்தும் பழக்கம்
கவுசல் கிஷோர் கூறியதாவது: எனது மகன் ஆகாஷ் கிஷோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டு இருந்தார். மறுவாழ்வு மையத்தில் சேர்த்தோம். அது கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவார் என கருதி, 6 மாதங்களுக்கு பிறகு எனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். இருப்பினும் எனது மகன் திருமணத்திற்கு பிறகு மீண்டும் மதுரை குடிக்க தொடங்கினார்.

இரு வயது குழந்தை
இரு ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 19 ஆம் தேதி ஆகாஷ் இறந்தார். அவரது மகனுக்கு இரு வயதுதான். நான் எம்பியாக இருந்தும், எனது மனைவி எம்எல்ஏவாக இருந்தும் என் மகனை காப்பாற்ற முடியாத நிலையில் சாமானிய மக்கள் எப்படி காப்பாற்றுவார்கள். என்னால் என் மகனை காப்பாற்ற முடியவில்லை அதனால் அவருடைய மனைவி விதவையாகிவிட்டார். எனவே குடிப்பழக்கம் இருக்கும் நபர்களை திருமணம் செய்யாதீர்கள். சுமார் 20 லட்சம் பேர் போதை பழக்கத்தால் இறக்கிறார்கள். போதை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து தங்கள் குடும்பங்களை மக்கள் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications