அன்புமணி அப்பல்லோவுக்கு எப்போ வந்தாரு! நான் ராமதாஸ் கூடவே இருக்கேனே! எனக்கு தெரியாதே! ஜி.கே.மணி
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து புகைப்படம் வெளியாகியுள்ளது.
86 வயதாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சமூகத்தினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அந்த காலத்தில் 9 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்தே சென்று தனது கட்சியான பாமகவை வளர்த்தவர் ராமதாஸ்.

இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. நடப்பதற்கு கூட சிரமத்தில் இருக்கும் அவர் உடன் உதவியாளருடன் இன்றும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம் சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
ராமதாஸுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று காலை ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ராமதாஸை பார்க்க அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ராமதாஸ் நலமாக இருக்கிறார். அவர் ஐசியூவில் இருப்பதால் 6 மணி நேரம் கழித்துதான் பார்க்க முடியும் என்றார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மருத்துவர் அய்யா அவர்கள் உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக்… pic.twitter.com/D1oVSDBRmP
— G.K.Mani (@PmkGkm) October 6, 2025
இந்த நிலையில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ராமதாஸ் நலமாக இருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்தே அவரை உடனிருந்து பார்த்துக் கொள்கிறேன். அன்புமணி எப்போது வந்தார் என தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
ராமதாஸை பார்க்க 6 மணி நேரம் கழித்துதான் அனுமதி என அன்புமணி கூறியிருந்த நிலையில் ராமதாஸை அவருடைய மனைவி, மகள் உள்ளிட்டோர் பார்த்ததை புகைப்படமாக எடுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ஜி.கே.மணி வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மருத்துவர் அய்யா அவர்கள் உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கட்சியில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி மற்றும் பிளவுதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான தனிப்பட்ட சண்டையாக இல்லாமல், கட்சியின் கொள்கை, கூட்டணி மற்றும் தலைமை அதிகாரம் தொடர்பான மோதலாகவே பார்க்கப்படுகிறது.
பாமக-வின் முக்கிய முடிவுகளை யார் எடுப்பது என்ற அதிகாரப் போட்டியே சண்டையின் மையமாக உள்ளது. கட்சி விதிமுறைகளின்படி அதிகாரம் யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்தது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த உட்கட்சிப் பூசலின் உச்சமாக, ராமதாஸ் அவர்கள், தனது மகனான அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தானே மீண்டும் தலைவராகவும் நிறுவனராகவும் அறிவித்துக் கொண்டார்.
அன்புமணி மீது பல்வேறு கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்புமணி மீது கட்சி பிளவை உண்டாக்க முயல்வது, தந்தைக்கு எதிராகச் செயல்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான (2026) கூட்டணி முடிவுகள் குறித்தே இருவருக்கும் இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமக, முந்தைய தேர்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்ததால்தான் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை என்று ராமதாஸ் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றும், கூட்டணியை இறுதி செய்வதில் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
கட்சி நலன் மற்றும் அரசியல் யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டணி குறித்த முடிவுகளை தான் எடுக்க விரும்பியதாகவும், சில குறிப்பிட்ட கூட்டணியை நோக்கி நகர்வதாகவும் கூறப்பட்டது.
அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் தரப்பால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தந்தை-மகன் இருவரையும் தன் அறையில் நேரில் சந்தித்துப் பேசி, சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக வீடியோ கால் மூலம் கலந்துகொண்ட ராமதாஸ், அன்புமணி உடன் பேச மறுத்துவிட்டார். இந்தச் சமாதான முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அன்புமணி பொதுக்குழுவைக் கூட்ட நீதிபதி அனுமதித்தார்.
கட்சியில் பிற குடும்ப உறுப்பினர்கள் நுழைவு
இந்தச் சண்டையின் விளைவாக, ராமதாஸ் தனது மகள் ஸ்ரீ காந்திமதி உள்ளிட்ட சிலருக்குக் கட்சியில் புதிய பதவிகளை அளித்து அதிகாரத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது, அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாமக-வின் எதிர்காலம், தலைமை மற்றும் அதன் கூட்டணி நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் குழப்பமும், விவாதமும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications