என்னோட கனவு நனவாகவே ஆகாதா?.. ராமதாஸ் வருத்தம்.. பாமகவினர் ஆறுதல்
சென்னை: அரசியல் மாற்றம் என்ற நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனையுடன் பேசியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து பாமக பொதுக் குழு கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் நிர்வாகிகளிடம் பேசினார்.
இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது ராமதாஸ் பேசுகையில் அரசியல் மாற்றம் என்ற நீண்ட நாள் கனவு, கனவாகவே போய் விடுமா?

அரசியல் மாற்றம்
என் வாழ்நாளில் அரசியல் மாற்றமே காண முடியாதா? கட்சி தொடங்கிய 4 மாதங்களில் 6.5 சதவீதம் வாக்குகளை பெற்றோம். தற்போது வெறும் 5.6 சதவீதமாக உள்ளது. இதுவரை 6 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளோம், 14 நாடாளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ளோம்.

எப்படி வழிநடத்துவது
ஒரு தேர்தலுக்கு ஒரு சதவீதம் அதிகம் பெற்றிருந்தாலும் கூட இந்நேரம் 20 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கலாம். பாமக சார்பில் ஒரு சட்டசபை உறுப்பினர் கூட இல்லை. இதற்கு உங்களை நான் சரியாக வழிநடத்தாததோ என நினைத்து பார்த்தேன். மேலும் இதற்கு மேல் எப்படி வழிநடத்துவது என யோசித்தேன்.

கோளாறு யாரிடம்
ஆனால் அப்படியில்லை, கோளாறு நிர்வாகிகளாகிய உங்களிடம்தான் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் சரியாக வேலை செய்தாததே அன்புமணி தோல்விக்கு காரணம் என மிகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதன் பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ், வரும் 2021 ஆம் ஆண்டு வெற்றிக்கான ஆண்டாக நமக்கு அமையும்.

கலங்காதீர்
முன்பை விட மிகவும் விவேகத்துடன் வேகத்துடன் பணியாற்றி வெற்றியை சமர்ப்பிப்போம் என உறுதி அளிக்கிறோம். ஐயா (ராமதாஸ்) நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம் என்றார் அன்புமணி. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications