திமுகவின் புழுகு மூட்டையை நம்பி மக்கள் ஏமாற்றம்- ராமதாஸ் வேதனை
Recommended Video
சென்னை: ஏமாற்றுக்காரர்களிடமும், பொய்யர்களிடமும் மக்கள் ஏமாறுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வலியுறுத்தி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்ததற்காக பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேற்றிரவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ராமதாஸ், உருக்கமாக பேசினார்.

வேலூர் மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக முதல் குரல் கொடுப்பது பா.ம.க.தான் என்றும், திமுகவோ, மற்றக்கட்சிகளோ பாமக அளவுக்கு போராட்டம் நடத்தியதில்லை எனவும் கூறினார். மேலும், திமுகவின் கவலையெல்லாம் வாக்குகளை பெறுவது பற்றியும், ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாகவும் தான் இருக்கிறது, மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் அவர்கள் எனத் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட பிரச்சனைகளுக்காக பாமக நடத்திய போராட்டங்களை, கடந்த தேர்தலில் மக்கள் நினைத்துப் பார்க்க தவறிவிட்டதாக கூறிய ராமதாஸ், எதிர்க்கட்சியின் பொய்யையும், புழுகு மூட்டையையும் நம்பி அவர்களுக்கு வாக்களித்து விட்டதாக பேசினார். மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கும் பாமகவை மறந்து, பொய்யர்களிடம் ஏன் ஏமாறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய ராமதாஸ், பாமக பின்னால் வந்தால் மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என உறுதியளித்தார்.
முதுமையில் தன்னால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், கோலூன்றியாவது இந்த தமிழ்ச்சமூகத்துக்கு போராடுவேன் என உருக்கமாக பேசிய அவர், தாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல என்றும், விவசாய பெருங்குடிகள் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications