“தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்”.. அன்புமணியிடம் சொன்ன ராமதாஸ்.. என்ன முடிவெடுக்கப் போகிறார்?
சென்னை: "பாமக என்பது ராமதாஸ் என்ற தனி மனிதன் ஆரம்பித்த கட்சி. அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம். தனி கட்சி ஆரம்பித்து கொள் என அன்புமணியிடம் மூன்று முறை தெரிவித்துள்ளேன்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால், அன்புமணி, தனிக்கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக செயல் தலைவர் பதவியில் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் அவகாசம் இருமுறை கொடுத்தும் பதில் ஏதும் எழுத்து பூர்வமாகவும் நேரில் வந்து விளக்க அளிக்காதது. அவர் மீது சொல்லப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எந்த நியாயமும் இல்லை என்பதால் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்காமல் உள்ளது அவர் ஒப்புக்கொண்டார் என அனுமானம் உள்ளது.
அன்புமணி மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவை என கருதப்படுகிறது. தான் தோன்றித்தனமாக தகுதியற்ற அரசியல்வாதி என அன்புமணி என்பதை நிரூபித்துள்ளார். கட்சியை அழிக்க முயற்சிக்கும் செயல் எனத் தெரியவருவதால் கட்சி விரோத போக்கு என முடிவு செய்யப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார்" என அறிவித்துள்ளார்.
மேலும், "கட்சியின் அடிப்படை இறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன், நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. அதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டால் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி அமைப்புகள் விதிகள், ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது எடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி உடன் உள்ளவர்கள் தனி கட்சியாக செயல்படுவதை போல் இருக்கின்றனர். அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்கத் தாயாரக உள்ளேன்.
பாமகவை 45 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கில் உழைத்து கஞ்சியோ கூழோ குடித்து 96 ஆராயிரம் கிராமங்கள் சென்று கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கி வளர்த்தேன். இந்த கட்சியில் சேருகிறவர்கள் சேர்ந்த பிறகு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. அரசியல் பயிலரங்கமும் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறேன். அதிலேயே அன்புமணிக்கு நம்பிக்கை இல்லை ஆதரவும் இல்லை. அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம். விரும்பினால் தனி கட்சி ஆரம்பித்துக்கொள் என்று அன்புமணியிடம் மூன்று முறை தெரிவித்துள்ளேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் இத்தனை நாட்களாக நடந்து வந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, இன்று கட்சியை விட்டே அன்புமணியை நீக்கியுள்ளார் ராமதாஸ். மேலும், தனிக் கட்சி தொடங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பாமக பொதுக்குழுவை தனியாக ஏற்கனவே கூட்டியுள்ள அன்புமணி, என்ன செய்யப்போகிறார்? தனது ஆதரவாளர்களைத் திரட்டி தனிக் கட்சி தொடங்குவாரா? அல்லது பாமகவுக்கு உரிமை கொண்டாடுவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications