கோமாளித்தனம் செய்யும் ராமதாஸ் தரப்பு..முடிஞ்சா கேஸ் போடுங்க! ஜிகே மணிக்கு சவால் விட்ட வக்கீல் பாலு!
சென்னை: டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ராமதாசு தரப்பினர் கொண்டாடுவதை பார்க்க வினோதமாகவும் , கோமாளித்தனமாகவும் உள்ளது எனவும், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப உரிமையியல் நீதிமன்றத்தை நாடி முடிந்தால் ராமதாசு தரப்பினர் அன்புமணிக்கு எதிரான தீர்ப்பை பெறட்டும் என பாமக வழக்கறிஞர் பாலு சவால் விடுத்துள்ளார்.
பாமக உட்கட்சி விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் ராமதாசே கட்சியின் தலைவர் என்றும் தேர்தல் ஆணையத்தில் தன்னை தலைவராக குறிப்பிட்டு அன்புமணி கொடுத்த கடிதம் போலியானது என நீதிமன்றத்தில் உறுதியாகிவிட்டதாக ராமதாசு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பாமக தொடர்பான வழக்கின் தீர்ப்பு இரவு கிடைத்தது.

பாமக உட்கட்சி விவகாரம்
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேற்று இரவு முதல் பல வதந்திகள் உலவி வருகிறது. ராமதாசு தரப்பினர் தீர்ப்பை குறிப்பிட்டு கொண்டாடுவதை பார்க்க வினோதமாகவும் , கோமாளித்தனதாகவும் உள்ளது. மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். இதற்குதான் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தினரா..? அரசியல் கட்சிகள் சிறு சிறு பிரச்சனைகளை உரிமையியல் நீதிமன்றம் மூலமே தீர்த்து கொள்ள வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
ராமதாஸ் தரப்பு விமர்சனம்
பத்தி 34 ல் ராமதாசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியதும், சிவில் நீதிமன்றத்தை நாட சொன்னதும் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளை எவ்வாறு கையாளுவோம் என்பது குறித்து தீர்ப்பில் தேர்தல் ஆணையம் கூறியுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ராமதாசு தரப்பினர் தீர்ப்பினை கொண்டாட ஒரு முகாந்திரம் கூட இல்லை. மாம்பழம் சின்னம் பாமகவிற்கு கிடையாது என தீர்ப்பின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
அன்புமணி பாமக
2026 வரை அன்புமணிக்கு பாமக தலைவராக அங்கீகாரம் கொடுத்ததை தேர்தல் ஆணயம் திரும்ப பெறவில்லை. அன்புமணி க்கு அதிகாரம் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுங்கள் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. முடிந்தால் உரிமையியல் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று ராமதாசு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கட்டும் , அப்போது தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைவர் பதவி குறித்து கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யும்.
சிவில் நீதிமன்ற சவால்
ஒருபோதும் ராமதாசு தரப்பால் இந்த வழக்கில் வெற்றி பெற முடியாது . காரணம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் ஆத்திரத்தில் மிகப்பெரும் தவறை அவர்கள் செய்துவிட்டனர். அன்புமணியை நீக்கியதாக கூறப்பட்ட கூட்டத்தை கூட்டியது யார்..? ராமதாசு என்ன செய்தாலும் எப்போதும் அவரை நாங்கள் மதிப்போம். சிபிஐ , ஐபிக்கு எல்லாம் ராமதாசு தரப்பினர் சென்றுவிட்டனர். ஆனால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்கின்றனர்.
ஜி.கே. மணி
எங்கள் பயணத்தை திமுக தூண்டுதலில் திசை திருப்ப பார்க்கின்றனர் . திமுகவின் அறிவாலயம் சொல்லும் குறுஞ்செய்திகளை ஜி. கே. மணி நிறைவேற்றி வருகிறார் . பாமகவை உடைக்கும் பணியை ஜி.கே. மணி செய்து வருகிறார். தைலாபுரத்தில் இருந்து ஒரு பதவியை பெண்ணாகரத்துக்கு (தனது மகனுக்கு) ஜி.கே.மணி மாற்றியதுதான் திருட்டு, அன்புமணி கட்சியை திருடவில்லை்" என்றார்.












Click it and Unblock the Notifications