போலீசாருக்கே பாதுகாப்பில்லை.. நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? விளாசிய அன்புமணி ராமதாஸ்
சென்னை : அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது மணல் லாரி மோதி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள தளவாய் போலீஸ் பணியில் இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் நேற்று நள்ளிரவு ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். இவர்கள் அன்னாசி நல்லூர் -அங்கனூர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது இவர்களுக்கு முன்னால் ஒரு மினி லாரி செல்வதைக் கண்டனர்.

அதில் மணல் இருந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் லாரியை முந்தி சென்று பிடிக்க முயற்சி செய்தனர். இதனைக் கண்ட டிரைவர் சுதாரித்துக் கொண்டு மினி லாரியை போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றார். இந்த மோதலில் கீழே விழுந்த தமிழ்ச்செல்வனுக்கு கை முறிந்தது, வெங்கடேசனுக்கு காயங்கள் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்த போலீசாருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர்களை உடனடியாக கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அன்னாசி நல்லூர் -அங்கனூர் சாலையில் மணல் கடத்திச் சென்ற சரக்குந்தை அப்பகுதியைச் சேர்ந்த காவலர் தமிழ்ச்செல்வனும், ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசனும் தடுக்க முயன்ற போது, அவர்கள் மீது மோதி விட்டு மணல் கடத்தல் சரக்குந்து தப்பிச் சென்றுள்ளது.
இதில் காவலர் தமிழ்ச்செல்வன் கைமுறிந்த நிலையிலும், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் காயமடைந்த நிலையிலும் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். காவலர்களை கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பலின் செயல் கண்டிக்கத்தக்கது.தமிழ்நாடு முழுவதும் மணல் கடத்தலைத் தடுக்க முயலும் அதிகாரிகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்குப் பிந்தைய ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 100 இடங்களிலாவது மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவற்றைத் தடுக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மணல் கடத்தல் என்பது சட்ட விரோத செயல்; அதில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஏற்பட்டாலே மணல் கடத்தல் குறைந்து விடும். ஆனால், தமிழ்நாட்டில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை. அவர்களைக் கண்டு அதிகாரிகள் தான் அஞ்ச வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு மணல் கடத்தல் கும்பல்களுக்கு செல்வாக்கு உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? என்ற ஐயம் எழுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் காவலர்களை கொலை செய்ய முயற்சி நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்தால் அப்பாவிகள் சிலரை கைது செய்து வழக்குக்கு முடிவு கட்டுவதையே காவல்துறை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த நிலையை மாற்றி மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவலர்களை கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications