மருந்து தட்டுப்பாட்டை சொன்னால் மருத்துவர்களை டிரான்ஸ்பர் செய்வீர்களா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
சென்னை: மருத்துவமனையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை சொன்னால் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்வதா என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் பொன்னை அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் ஆய்வு நடத்திய அமைச்சர் துரைமுருகன், அங்கிருந்த மருத்துவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதுடன் உடனே கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

ஏற்க முடியாது
''வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்.தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளன. ''

மருந்து வரவில்லை
''வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவர்கள் அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதில் மருத்துவர்களின் தவறு எதுவும் இல்லை. அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது.''

வரலாற்று பிழை
''இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி. மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் அதிரடி
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 10 அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் துரைமுருகனும், மா.சுப்ரமணியனும் அதிரடி ஆய்வு நடத்திய போது, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பணியில் இருந்து மருத்துவரை அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார். அப்போது மருத்துவர் அளித்த பதில் ஏற்கதக்க வகையில் இல்லாததால் மிகுந்த கோபமடைந்த அவர், மருத்துவரை கன்னியாகுமரிக்கு மாற்றுமாறு அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications