டிவியை தூக்கிப் போட்டு உடைத்த பாமகவினர்.. போராட்டத்தின்போது சம்பவம்..அன்புமணி மீது பாய்ந்தது வழக்கு!
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா டி.வி, மின்விசிறியை உடைத்ததால் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பாமக நிர்வாகிகள் தமிழக அரசு வழங்கிய விலையில்லா வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, விலையில்லா மின்விசிறி போன்றவற்றை தூக்கிப் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பிரதீப் இலவச டிவி, மின் விசிறியை உடைத்துள்ளார்.
இதையடுத்து, தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கிய விலையில்லா டிவி, மின்விசிறியை பாமக ஆர்ப்பாட்டத்தின்போது உடைத்ததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது சென்னை எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "தமிழக முதலமைச்சர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மின்சாரத் துறையில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க வேண்டும். நேர்மையான திறமையான அதிகாரிகளை நியமனம் செய்து நல்ல நிர்வாகம் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் 85 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், இந்த மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 23 மாதத்தில் தமிழக அரசு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனாலும், இவ்வளவு தொகை வந்த பிறகும் மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வளவு தொகை வந்த பிறகும் நஷ்டத்தில் இயங்க காரணம் ஊழல் தான்.
தமிழக அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை 1 யூனிட் 3 ரூபாய் 40 பைசா. தமிழக அரசு தனியாரிடம் 11,500 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுகிறது, அது 1 யூனிட் 12 ரூபாய். அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தனியாரிடமிருந்து தமிழக அரசு மின்சாரத்தை பெற்று வருகிறது. தனியாரிடம் மின்சாரம் வாங்குவதன் மூலமாக கமிஷன் பெற்று ஊழல் நடைபெறுகிறது.
இந்த ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தில் இயங்கும். திமுக தேர்தல் வாக்குறுதியாக, மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது வரை அது நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், "மின்சார கட்டணம் ஷாக் அடிக்கிறது" என்றார். இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், மின் கட்டணத்தை திரும்பப்பெறும் வரை பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
மத்திய அரசு சொல்வதால் நாங்கள் மின் கட்டணத்தை ஏற்றியுள்ளோம் என தமிழக அரசு சொல்கிறது. மத்திய அரசு சொல்வதை தமிழக முதலமைச்சர் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறாரா? இதற்கு மட்டும் மத்திய அரசு சொல்வதை நாங்கள் கேட்போம் மற்றதற்கு நாங்கள் கேட்க மாட்டோம் என சொல்கிறார் முதலமைச்சர். மக்களுக்கு சுமை கொடுக்கும் இந்த விஷயத்தை தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications