பெரிய குளறுபடி.. இன்றைய குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்துங்க : அன்புமணி ராமதாஸ்
இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, வேறு ஒருநாளில், தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்று வருகிறது.
சில தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வு வினாத்தாள்களில் பதிவு எண்கள் மாறி இருந்தன. தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

குரூப் 2 மெயின்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகின்றனர். குரூப் 2 கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு காலையிலும், பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு பிற்பகலிலும் நடக்கிறது. இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

தேர்வில் குளறுபடி
சில இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் பதிவு எண்கள் மாறி இருந்ததால் 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், வினாத்தாள் வழங்க தாமதமானது. வினாத்தாள் வழங்கப்பட்டதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேர்வர்கள் பதற்றமடைந்தனர். இதே போன்று தமிழகத்தின் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தாமதமாகத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்றன. எந்தெந்த மையங்களில் தாமதமாகத் தேர்வு தொடங்கியதோ, அங்கெல்லாம் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

வினாத்தாள் வெளியாகிவிட்டது
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.

ரத்து செய்யுங்கள்
போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை. சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications