3வது முறையாக மோடி.. உங்க உழைப்பு தான் காரணம்! அன்புடன் சொன்ன அன்புமணி.. ராமதாஸ் என்ன சொன்னார்?
சென்னை: உங்கள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தான் இந்த வெற்றிக்கு காரணம் என மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு பா.ம.க தலைவர்
அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்," நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தலைமையேற்று வழிநடத்திச் சென்று அமோக வெற்றி பெறச் செய்ததுடன், மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களவைத் தேர்தலுக்காக வலிமையான அணியை கட்டமைத்ததுடன், அந்த அணியின் வெற்றிக்கான உத்திகளையும் வகுத்த தாங்கள், அனைத்துப் பொறுப்புகளையும் உங்கள் தோள்களில் சுமந்ததுடன், நாடு முழுவதும் 250க்கும் கூடுதலான இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட, கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டீர்கள். உங்களின் இந்த கடுமையான உழைப்பும், மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த ஆதரவும், அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் தான் இந்த வெற்றிக்கு காரணமாகும்.
நாட்டின் வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளும், படைத்த சாதனைகளும் ஈடு இணையற்றவை. அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றை விட அதிகமான சாதனைகளை இந்தியா உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்; வளமான, வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான பயணத்தில் நீங்கள் வெற்றி பெற பா.ம.க. சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்," நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் முதல் தலைவர் நீங்கள் தான். 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நீங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஆற்றிய பணிகள் தான் இந்த வெற்றியை உங்களுக்குத் தேடித் தந்திருக்கின்றன. நாட்டு மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் மறு உறுதி செய்திருக்கின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பிரதமராக நீங்கள் ஆற்றிய பணிகள் உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதைக்குரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. அதன் மீது வளமான, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவீர்கள்; பொருளாதாரம், சமூகநீதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள் என்று ஒட்டுமொத்த மக்களும் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றவும், சிறப்பான ஆட்சியை வழங்கவும் பா.ம.க. சார்பில் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications