ராமதாசுக்கு பொன்னாடை போர்த்திய எடப்பாடி.. அன்புமணிக்கு ஓபிஎஸ் சால்வை.. விக்ரமன் படம் போல பாசமழை
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த பொதுத் தேர்தலில், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இருந்தன.
இம்முறையும், அதே கூட்டணியை தக்க வைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதன் தலைவர்கள் முன் வைத்த நிபந்தனை என்பது, பாமகவும் நமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதானாம்.
முதல்வருடன் சந்திப்பு
பாஜகவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதை பாஜக செவ்வனே செய்து முடித்துள்ளதாம். எனவே இரு கட்சிகள் நடுவே நிலவும், இறுக்கத்தை தளர்த்த, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்தார். இதன் மூலம் கூட்டணியை அவர் உறுதி செய்துள்ளார்.
அன்புமணி
திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக தலைமை, அன்புமணி ராமதாஸ் மூலமாக பாஜக கூட்டணியிலேயே பாமகவை தக்க வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
முதலில் அதிருப்தி
டாஸ்மாக், நீட் உள்ளிட்ட விவகாரங்களில், தொடர்ச்சியாக அதிமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டி வந்த ராமதாசுக்கு, அக்கட்சியோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லை என்றும், இருப்பினும், இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை ஏற்றதாகவும் தெரிகிறது.
இணக்கம் வேண்டும்
ராமதாஸ் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியானதால், பாமக, அதிமுக தொண்டர்கள் நடுவே இணக்கமாக தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த இறுக்கத்தை உடைக்கவே, அதிமுக தலைவர்களை ராமதாஸ் சந்தித்தார். ராமதாசை நட்சத்திர ஹோட்டலில் பச்சை சால்வை போர்த்தி வரவேற்றார் முதல்வர் எடப்பாடி. அன்புணிக்கு ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். அந்த இடமே விக்ரமன் படம் போல லாலாலாலா.. என்ற பிஜிஎம்முடன், அன்பு வெள்ளம் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்ததை போல இருந்தது.