அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் பாமகவில் இருந்து நீக்கம்.. ராமதாஸ் அதிரடி நடவடிக்கை
சென்னை: அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை பாமகவில் இருந்து நீக்கம் செய்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரை நீக்கியுள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தை சட்ட விரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமகவில் தந்தை - மகன் மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை. ராமதாஸ்க்கும் - அன்புமணிக்கும் இடையே மோதல் மேலும் வலுப்பெறவே செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தற்போது அன்புமணி தரப்பு பாமக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்தது தான்.
இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான ராமதாஸ் நேற்று தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதினார். இதில், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாமக பெயரை சட்ட விரோதமாக அன்புமணி பயன்படுத்துவதாகவும், அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தை சட்ட விரோதமானது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் அன்புமணி தரப்பில் உள்ள 3 எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அன்புமணிக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரை நீக்கியுள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications