எண்ணி 3 நாட்கள்.. புயலடிக்க போகும் தமிழ்நாடு அரசியல்.. ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு
விழுப்புரம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. காங்கிரஸ், ராமதாஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமகவில் தந்தை மகன் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. மகன் அன்புமணி அணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். தந்தை ராமதாஸ் எந்த முடிவும் எடுக்கவில்லை [PMK Ramadoss].

பாமக ராமதாஸ் நிலைப்பாடு
பாமக நிறுவனர் ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாமகவில் 34 அமைப்புகள் இருக்கின்றன. மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளைஞர் சங்கம், சமூக ஊடக பேரவை உள்ளிட்ட அந்த 34 அமைப்புகள் பாமகவின் வளர்ச்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். கிளை, ஒன்றியம், பேரூர், வட்டம், மாவட்ட உள்ளிட்ட பிரிவுகளையும் அதனுடன் வளர்ப்பதற்கும் ஆலோசனை நடத்தினோம்.
இந்த பிரிவுகளை எப்படி கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்பது பற்றி நாள்தோறும் பேசி வருகிறோம். அந்த வகையில் அவர்களை உற்சாகப்படுத்தி, தெம்பூட்டி செயல்பட வைக்கிறோம். இதற்காக அவர்களுக்கு அரசியல் பயிலரங்கத்தை நடத்தி வருகிறோம். பாமக தமிழ்நாடு அரசியலில் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறது.
3 நாட்களில் முடிவு
என்ன கூட்டணி என்று கேட்கிறீர்கள். கூட்டணி குறித்து தற்போதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உங்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். இப்போது கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அது தொடர்பான கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
நாங்கள் பயணம் செய்யும் வாகனம் அருகில் வந்துவிட்டது என கூறியிருந்தேன். அதாவது மாற்றங்கள் எல்லாம் வருவது இயற்கை தானே. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருப்போம். இன்னும் 3 நாட்கள் தமிழ்நாடு அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பை நீங்கள் பறைசாற்றுவீர்கள். 3 நாட்களில் எங்கள் கூட்டணியை உறுதிபடுத்துவோம். நாங்கள் இணையும் கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தும்" என்றார்.












Click it and Unblock the Notifications