மன உளைச்சல், மன அழுத்தம்.. இந்த பயணத்தை அப்படிதான் தொடங்கினேன்.. ஆவேசமாக சொன்ன அன்புமணி!
தர்மபுரி: மன உளைச்சல் மற்றும் மன அழுத்ததுடன் தான் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். உரிமை மீட்பு பயணத்தின் 100வது நாள் நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி, அடுத்த 108வது நாள் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். இதன் 100வது நிறைவு நாளுக்கான பொதுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், இந்த நடைபயணம் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

மன உளைச்சல், மன அழுத்தத்தில் தான் இந்த பயணத்தை தொடங்கினேன். ஆனால் எனது நடைபயணத்தின் மூலமாக நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த 28 ஆண்டுகளில் எத்தனையோ மாநாடு, பொதுக்கூட்டம், நடைபயணம் சென்றுள்ளேன். நான் இன்னும் 4 மாவட்டத்திற்கு கூட முழுதாக போகவில்லை. அதற்குள் 3 மாதங்கள் முடிந்துவிட்டது.
காந்தி தண்டி யாத்திரை சென்றார். அப்போது காந்தியுடன் சென்றவர்கள் 78 பேர்தான். ஆனால் அந்த பயணம் முடிவடையும் போது 1.50 லட்சம் இணைந்தனர். விடுதலை போராட்டத்திற்கு அது முக்கியமான நடைபயணமாக அமைந்தது. அதேபோல் இந்த கொள்ளைக்காரர்களுக்கு முடிவு கட்டும் பயணமாக இது அமையும். முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த மக்கள் மீது என்ன கோபம்?
அவர்கள் என்ன செய்தார்கள்.. ஸ்டாலினுக்கு நிர்வாகமே தெரியாது.. இப்படியொரு முதல்வரை தமிழ்நாடு பார்த்திருக்காது.. திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேசுவதற்கே தகுதியில்லை.. திமுக இப்போது மனுநீதியை நிலைநாட்டி வருகிறது. அதற்கு அடிமையாக உள்ளது. திமுக பட்டியலின மற்றும் வன்னியர் சமூகத்திற்கு எதிரான கட்சி.
எனது நடைபயணத்தின் அடுத்த 108வது நாள் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும். விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும். அடுத்த 108 நாட்களில் தேர்தல் அறிவிப்பு வருகிறது. தேர்தலையொட்டி மேற்கொண்ட நடைபயணம் மிகப்பெரிய வெற்றி. மன சோர்வு, மன அழுத்தம் ஏற்பட்டால் தர்மபுரி வருவேன். இங்கு வந்தால் புது உற்சாகம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications