’குழந்தை’சாமியாக மாறிய ’குல’சாமி.. அன்புமணி ஒரே போடு! அண்டர் கண்ட்ரோலில் ராமதாஸ்? யார் அந்த 3 சார்?
சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிமுகவும் திமுகவும் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவரான அன்புமணி ஒருபுறம் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தாலும் உட்கட்சி விவகாரத்தால் சில சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று பேசிய அன்புமணி, ராமதாஸ் குழந்தை போல இருப்பதாகவும், அவரை மூன்று பேர் தவறாக வழி நடத்துவதாக சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் யார் அந்த மூன்று பேர் என்ற கேள்வி பாமக நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக திமுக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியை வலுவாக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சேர்ந்திருக்கும் நிலையில் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சி விவகாரங்களால் தொண்டர்கள் நிர்வாகிகள் இடையே கடும் குழப்பம் நிலவுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவரை செயல் தலைவராக நியமிப்பதாக கூறினார். ஆனால் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் என அன்புமணி கூறி வருகிறார். அதற்கு பிறகு நடந்த பல்வேறு பாமக நிகழ்வுகளில் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து அதிரடியாக அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி வருகிறார் ராமதாஸ்.
இதுவரை 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் மாநில செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள், தலைவர்களும் அடங்குவர். இது ஒரு புறம் இருக்க சமீப காலமாக ஊடகங்களை சந்தித்து பேசி வரும் ராமதாஸ் நான் விரும்பும் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதற்குப் பிறகுதான் அன்புமணி எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று பாமக நிகழ்வில் பேசிய அன்புமணி வயதை பயன்படுத்தி சிலர் ராமதாசை தவறாக வழி நடத்துவதாகவும், ஒரு குழந்தை போல அவர் செயல்படுவதாக கூறியிருந்தார். மேலும் மூன்று பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ் இருப்பதாகவும் பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. கட்சியிலும் குடும்பத்திலும் இருக்கும் சிலர் தவறாக வழி நடத்துவதாக சொல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதன்முறையாக அன்புமணி மூன்று பேரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். யார் அந்த மூன்று பேர்? என்ற கேள்வி பாமக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது," பாமகவின் முன்னாள் தலைவரான ஜிகே மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மற்றும் தைலாபுரம் வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணியை சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் கட்சியில் இருக்கும் ஒருவரும் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனையை பெரிதுபடுத்தி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு, பொதுக்கூட்டம், ஆலோசனை என நடத்தி வருகின்றனர். கட்சியின் தலைவர் ஆன அன்புமணி தொடர்ந்து பல்வேறு கட்சி நிகழ்வுகளை நடத்தி வருகிறார். ஆனால் ராமதாஸ் வீட்டில் தான் இருக்கிறார். அவரை குலசாமியாகவே நாங்கள் கருதுகிறோம். ஆனால் அன்புமணி குறிப்பிட்டது போல அவர் குழந்தை சாமியாக மாறிவிட்டார். கட்சியில் தங்களுக்கான அங்கீகாரம் போய்விடுமோ என அஞ்சும் சிலர் அன்புமணியை ஓரம் கட்ட திட்டம் தீட்டுகின்றனர்.
ஆனால் பொதுக்குழுவின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் அனைவரும் அன்புமணி பின்னால் தான் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களையும், புகாருக்குள்ளானவர்களையும் மீண்டும் ராமதாஸ் நியமித்து வருகிறார். மேலும் தற்போது கட்சியில் பதவி வாங்கி தருகிறேன் என நிர்வாகி ஒருவர் முன்னாள் நிர்வாகிகளிடம் மூன்று லட்சம் ரூபாய் வசூல் செய்து வருகிறார். இதனால் தான் கட்சியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் போட்டி போட்டுக் கொண்டு மாவட்ட தலைவர்களும் செயலாளர்களும் கூட்டம் நடத்தும் நிலையில் யார் பின்னால் நிற்பது என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது. கட்சியின் எதிர்காலம் அன்புமணி என்பதால் பெரும்பாலான நிர்வாகிகள் அவர் பின்னால் தான் இருக்கிறார்கள். அதை 'தைலாபுரம்' உணர வேண்டும். அப்பா மகன் இருவரும் சேர்ந்து கட்சியில் இருக்கும் ஒரு சிலரை நீக்கி விட்டாலே போதும் பழைய பலத்துடன் பாமக வரும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications