இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது.. ஏன் இப்படி? ஜி.கே.மணி சொன்ன காரணம்!
எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இனி தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த ஒரு இடைதேர்தலிலும் பாமக போட்டியிடாது என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் பாமக அறிவித்தது.
2024 தேர்தலைக் குறி வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில் பாமகவின் இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது.
இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி என்ற பெயரில் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழைத் தேடி
தமிழைத் தேடி என்ற பரப்புரைப் பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரும் 21ஆம் தேதி சென்னையில் துவங்கி 28ஆம் தேதி மதுரையில் முடிக்கிறார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, "தமிழைத் தேடி பரப்புரை பயணம் தமிழை மீட்டெடுக்கவும் தமிழை வளர்க்கவும் தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் தமிழ் சிதைந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்திலும் நடைபெறுகிறது.

அரசியல் கலப்பு இல்லாமல்
தமிழன்னை சிலையுடன் இந்த பயணம் தொடங்கப்படுகிறது. இந்த பயணம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பை பெறும். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உலக தாய்மொழி தினமாக பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் இந்த பயணத்தை எங்கள் ராமதாஸ் தொடங்குகிறார். இந்த பயணம் என்பது எந்தவித அரசியல் கலப்பு இல்லாமல் அரசியல் கொடி இல்லாமல், பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இந்த தமிழைத் தேடி பரப்புரைப் பயணம் நடைபெறுகிறது.

கோரிக்கைகள்
தமிழ் மொழியைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும், புதிதாக பயன்பாட்டுக்கு வரும் அறிவிவியல் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இடைத்தேர்தல்
மேலும் பேசிய ஜி.கே.மணி, "தமிழ்நாட்டில் இனி எந்த ஒரு இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது. நாங்கள் ஒரே ஒரு இடைத்தேர்தல் மட்டுமே போட்டியிட்டுள்ளோம். இனி வரும் காலங்களில் போட்டியிட மாட்டோம். இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு தொகுதி வெற்றியால் ஆட்சி மாற்றம் நடைபெறுமா? அப்படி இருக்கும் சூழலில் ஏன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இனி தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த ஒரு இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications