ஈரோடு போல இருக்க கூடாது.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.. பாஜக அண்ணாமலை
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் இருக்கக் கூடாது என்றும், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடத்த வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் திமுக உற்சாகத்துடன் எதிர்கொள்கிறது. திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று தலைமை ஏற்கனவே அறிவித்து, பணிகளை தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அபிநயா களம் காண இருக்கிறார்.
பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, "ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
விக்கிரவாண்டி தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடத்த வேண்டும். இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும், ஆனால் வரலாறு மாறும். பாமக போட்டியிட்டாலும், பாஜக களத்தில் இறங்கி பணியாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அண்ணாமலை கூறுகையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தல் போன்று இருந்து விடக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எங்களுடைய வேண்டுகோள். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியது. மக்களை விலைக்கு வாங்கி ஆட்டுப்பட்டியை போன்று அந்த தேர்தல் நடைபெற்றது.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பாமக போட்டியிடுகிறது. இது கூட்டணியில் உள்ள எல்லா தலைவர்களும் பேசி முடிவு செய்து, அமித்ஷா, ஜே.பி. நட்டா ஆகியோருடன் தொலைபேசியில் பேசி ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இந்த இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
40-க்கு 40 தொகுதிகளை அவர்கள் (திமுக.கூட்டணி) பெற்றிருக்கிறார்கள். இது இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா? என்றால் ஒத்துக் கொள்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் 86 சதவீதம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் அரசியலில் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றங்கள் நடக்கலாம். நாங்கள் நம்பிக்கையுடன் போராட போகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications