பாமக இளைஞரணி பதவி.. முதலில் தமிழ்க்குமரன்.. இப்போது முகுந்தன்.. அவமானப்படுத்தி அனுப்பிய அன்புமணி
சென்னை: பாமக இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்பட்ட முகுந்தன் 5 மாதங்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்பாக பாமக இளைஞரணி தலைவராக இருந்த தமிழ்க்குமரன் 3 மாதங்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் உடனான மோதலே காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் இவர்கள் இருவரையும் அன்புமணி அவமானப்படுத்தி அனுப்பியதாக அக்கட்சியினர் மத்தியில் விவாதங்கள் நடந்து வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்திற்கு சென்றுள்ளது. ஏற்கனவே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கிய நிலையில், தற்போது அவர் செய்த தவறுகளை பட்டியலிட்டு ராமதாஸ் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். குறிப்பாக 35 வயதிலேயே அன்புமணி ராமதாஸை மத்திய கேபினட் அமைச்சராக்கியது தவறு என்றும் கூறி இருக்கிறார்.

ராமதாஸ் பேட்டி
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க காரணம் அன்புமணி, செளமியா தான். இருவரும் தனது கால்களை பிடித்து கண்ணீர்விட்டு அழுதனர். பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என்று தெரிவித்தார்.
முகுந்தன் விலகல்
இந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட முகுந்தன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகி கொள்கிறேன். ராமதாஸ் தான் என்றென்றும் எனது குல தெய்வம். அன்புமணி தான் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி எதிர்ப்பு
கடந்த டிசம்பர் மாதம் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்ட போதே மேடையில் இருந்த அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் காந்திமதியின் மகனான முகுந்தனுக்கு பதவி கொடுக்க கூடாது என்பதில் அன்புமணி ராமதாஸ் தீவிரமாக இருந்தார். அதேபோல் பாமக தலைவராக அன்புமணி பொறுப்புக்கு வருவதற்காக ஜிகே மணி விலகி கொண்டார்.
தமிழ்க்குமரன் விவகாரம்
இதனால் பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு ஜிகே மணியின் மகனான தமிழ்க்குமரனுக்கு அளிக்கப்பட்டது. தமிழ்க்குமரன் லைகா நிறுவனத்தின் இயக்குநராக இருந்ததோடு, சில படங்களை சொந்தமாகவும் தயாரித்து வந்தார். இளைஞரணி தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்ட பின், சென்னையில் அன்புமணி தலைமையில் நடந்த பேரணியில் சில சினிமா நட்சத்திரங்களையும் அழைத்து வந்தார்.
3 மாதங்கள்
ஆனால் ஜிகே மணியுடன் நல்ல உறவில் இல்லாத அன்புமணி, அவரின் மகனான தமிழ்க்குமரனுடனும் மோதலில் ஈடுபட்டார். இதனால் பதவி அளிக்கப்பட்ட வெறும் 3 மாதங்களில் தமிழ்க்குமரன் விலகுவதாக அறிவித்தார். தமிழ்க்குமரன் 3 மாதங்களில் பதவி விலகிய நிலையில், தற்போது முகுந்தன் 5 மாதங்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருவரையும் அன்புமணி அவமானப்படுத்தியதே விலகலுக்கு காரணம் என்று ராமதாஸ் கூறி இருக்கிறார். இதனால் பாமக தொண்டர்கள் இடையே பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications