''வாழ்த்துக்கள் ஸ்டாலின்.. தேசத்தின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றுவோம்''.. பிரதமர் மோடி செம ட்வீட்
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல் தமிழக மக்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது கேரள மக்களின் வெற்றி...பினராயி விஜயனின் உருக்கமான ட்வீட்
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. விறுவிறுப்புடன் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டி விட்டது.
திமுக அபார வெற்றி
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரியணையில் அமர போகிறது. . இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில் திமுக 45 இடங்களில் முன்னிலையும் 110 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அதிமுக 36 இடங்களில் முன்னிலையும் 42 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது.
ஸ்டாலினுக்கு வாழ்த்து
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையின் மொத்த தொகுதிகளையும் திமுக முழுவதுமாக கைப்பற்றி விட்டது. திமுகவின் வெற்றியால் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இது தவிர பல்வேறு மாநில முதல்வர்கள், பிரமுகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், கொரோனா தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பணியாற்றுவோம்
இதே போல் தமிழக மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். மாநிலத்தின் நலனுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என்றும் தமிழக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். பாஜக தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.