மத்திய அரசு முடிவுக்கு தமிழக ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு .. எடுத்த மிகப்பெரிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்து மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் பள்ளிக்கல்விக்கான நிதி தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டிற்கு இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரித்துள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறுகையில், "ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டு அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்ற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கலங்கடித்துள்ளது. ஆசிரியர், மாணவர் சமுதாயத்தை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் இது மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

PMSri central government Teachers

கடந்த 2004 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பங்களிப்பு மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் அனைவருக்கும் கல்வித் திட்டம் (Sarva Shiksha Abhiyan) உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்திட்டம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமாக (RMSA) மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு அரசுகளின் பங்களிப்பின் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது இத்திட்டம் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் பணியாற்றக் கூடிய சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதியம், கலைத் திருவிழாக்கள், மாணவர் நலன் சார்ந்த உதவி திட்டங்கள், பள்ளி வளர்ச்சி காண திட்டங்கள் மற்றும் கட்டுமான வசதிகள் போன்றவை செய்யப்பட்டு வந்தன. தொலைநோக்குப் பார்வையோடு இரு அரசுகளும் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் மூலம் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு பிஎம்ஸ்ரீ என்ற பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும் எனவும் இந்தப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாட்டு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் இரு மொழி கல்விக் கொள்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் தமிழ்நாட்டின் கல்வித்தரம் இந்திய ஒன்றியத்திலே முன்னிலையில் உள்ளது. பல்வேறு கல்வியாளர்கள் முதல் அறிவியல் அறிஞர்கள் வரை தமிழ்நாட்டு இரு மொழி கல்விக் கொள்கையில் பயின்றவர்கள் என்பதை மறந்து விட முடியாது.

ஒன்றிய அரசு தொடர்ந்து சர்வாதிகார நோக்கோடு ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் எங்கள் உரிமையான எங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும். இதனால் பல நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களின் ஊதியம் போன்றவை வழங்க இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய நிதியை வழங்காமல் தொடர்ந்து வழங்காமல் தமிழக மாணவர்களை ஒன்றிய அரசு வஞ்சித்தால், தமிழ்நாடு முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களை ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக முன்னெடுப்போம்" இவ்வாறு கூறியுள்ளார்.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசின் இந்த தவறான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள், சிறப்பாசிரியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் நாசகாரக் கல்விக் கொள்கையான, தேசத்தின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை வழங்க முடியாது என்று ஒன்றிய அரசின் கல்வியமைச்சர் கூறுவது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையானது தமிழ்நாட்டு மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஏராளமான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் பாராட்டும் துறையாகவும், மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி திட்டங்களை பின்பற்றும் முன்னோடி துறையாகவும், வழிகாட்டும் துறையாகவும் உள்ளது.

2018ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்குத் தொகையான ரூ.2,152 கோடி நிதியினை தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு இன்னும் தராமல் இருக்கிறது. இதேபோல், 2023-2024 ஆம் நிதியாண்டில் கொடுக்க வேண்டிய தவணைத் தொகையான ரூ.249 கோடியையும் ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை. இதுபோன்ற நிதிகளை வழங்காமல் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வஞ்சிக்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

ஏன் நிதியை விடுவிக்கவில்லை? என்று கேட்டால், பெரியண்ணன் மனப்பான்மையில் PMSHRI பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நிதியினை விடுவிக்க முடியும் என ஒன்றிய அரசு சொல்லி வருகிறது. இது ஏற்புடையது அல்ல. PM SHRI பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மும்மொழிக் கொள்கையை (கட்டாய ஹிந்தியை) ஏற்றுக் கொள்ள நிபந்தனையாக மும்மொழிக் கொள்கை உள்ளது.

இது தமிழ்நாடு பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது. ஒரு வகையில் இது மறைமுகமாக கட்டாய இந்தி திணிப்பு என்பதை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் அறிந்துள்ளனர். தமிழ்நாட்டில், தாங்கள் செல்லா காசாகி விட்டதால் தேர்தலில் ஏற்பட்ட அவமானத்திற்கு பழி வாங்க, தமிழ்நாட்டின் திட்டங்களுக்கெல்லாம் நிதி வழங்காமல் முட்டுக்கட்டை போடுவது, கல்வியில் காவியை திணிக்க முயல்வது, தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்விக்கான நிதியினை உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவது என்று பாசிச ஆட்சி செய்யும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதனால் தமிழ்நாடு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மட்டுமல்ல ஏழை எளிய மக்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதியம் என பல்வேறு கல்வித் திட்டங்களுக்கான போதிய நிதியினை தமிழ்நாடு அரசு தன்னுடைய நிதியில் இருந்து ஒதுக்கி வருகிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்தை புறம் தள்ளி பாசிச, அரசியல் விரோத, கலாச்சார விரோத படையெடுப்பை தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து நடத்துமானால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாணவர்கள், பொதுமக்களை திரட்டி ஒன்றிய அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்

SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "NEP 2020 - தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கும் இந்தாண்டுக்குரிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வழங்கப்படும் என்று பேட்டி அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை SSTA மாநில அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக மாணவர்களுக்கான மாநில அரசின் கல்விக் கொள்கையான இரு மொழிக் கொள்கையை பின்பற்றி பல்வேறு துறைகளில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள். இனி வருங்காலத்திலும் இதைவிட இன்னும் சிறந்து விளங்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நிதி விடுவிக்க தொடர்ந்து காலதாமதப்படுத்தினால் ஆசிரியர்கள் மட்டுமல்ல புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் இடர்பாடுகளை எடுத்துரைத்து பெற்றோர்களையும் இணைத்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+