பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது.. சலசலக்கும் நாங்குநேரி சம்பவம்! வைரமுத்து அட்வைஸ்
சென்னை: சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்கு பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த சாதிய வன்முறை சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் வேறு ஒரு சாதியை சேர்ந்த மாணவர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இதற்கு முன்னரும் சாதிய மோதல் சம்பவங்களில் 12-17 வயது சிறார்கள் ஈடுபட்டிருந்தாலும், அது பள்ளியின் மூலமாக உருவாகி இருக்கவில்லை.

ஆனால் இந்த சம்பவம் முழுக்க முழுக்க பள்ளியிலிருந்துதான் வெடித்து கிளம்பியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்திருந்தார். இது குறித்து அவரது தாய் விசாரிக்கையில் உண்மை தெரிந்திருக்கிறது. அதாவது, சக சாதி மாணவர்கள் தன்னை அவர்களுடைய பைகளை சுமக்க கட்டாயப்படுத்துவதாகவும், தன்னிடமிருக்கும் சில்லறைகளை பறித்துக்கொள்வதாகவும், இது தவிர உளவியல் ரீதியாக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாய் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட, இதை அப்படியே எழுதி வாங்கிய தலைமை ஆசிரியர் இதில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் என் மீதே புகார் கொடுக்கிறாயா? என அன்று இரவே புகார் கொடுத்த மாணவனின் வீட்டிற்கு சென்று அவரை கண்மூடித்தனமாக வெட்டி சாய்த்துள்ளனர். இதை பார்த்து பதறி தடுக்க வந்த அவரது தங்கையையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையெல்லாம் பார்த்த இவர்களது தாத்தா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரை விட்டிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறார்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சோகம் என்னவெனில் சம்பவத்தில் ஈடுபட்ட சிறார்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் செய்தது குறித்து எவ்வித குற்ற உணர்வும் இன்றி ஜாலியாக இருந்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகள் வரை கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது குறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்த கவிஞர் வைரமுத்து, "மதம் மாறும் சட்டம் இருப்பது போல சாதி மாறவும் சட்டம் வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து இன்று பேட்டியளித்துள்ள அவர், "பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது!
சாதிகளை ஒழிக்கப் பிறந்த மன மருத்துவ நிலையங்களான கல்விக் கூடங்களிலேயே, சாதி தலைதூக்குவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது! சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்கு பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications