பெண்களே உஷார்! இன்ஸ்டா காதல் வலை விரிக்கும் மிஸ்டர்.ரோமியோக்கள்! பெற்றோர் கண்காணிப்பு மிக அவசியம்
சென்னை : இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ள போலீசார், பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிப்பது அவசியம் என வலியுறுத்தி உள்ளனர்.
மனிதர்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப் போன செல்போனால் கள்ளக்காதல் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப், பேஸ்புக் என பல்வேறு செயலிகளில் பெண்கள் அடையாளம் தெரியாத ஆண்களுடன் டப்மாஸ் செய்து உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிர்ச்சி சம்பவம்
தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. ஒற்றை செல்போனில் உலகமே கைக்குள்ளாக வந்துவிட்டதாக கருதும் நிலை தான் தற்போது உள்ளது.சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர். அவ்வாறு உலா வரும் பெண்கள் தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது. இதனால் பல நேரங்களில் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று தான் வருகின்றன. அந்த வகையில் தான் திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்ஸ்டா காதல் வலை
சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த 19வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த விஷ்வா என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகி வந்தார். பின்னர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுவதாத கூறி மிரட்டி தன்னிடமிருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மேலும் லேப்டாப், ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார் என புகார் அளித்தார்.

சிக்கும் இளம் பெண்கள்
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. சென்னையில் இன்ஸ்டாகிராமில் பழகி 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல விளம்பர மாடலும் சீரியல் நடிகருமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது சையத். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். விளம்பரம் மற்றும் டிவி சீரியலிலும் இவர் நடித்து வந்துள்ளார். இவர்தான் காவல்துறையில் சிக்கியவர். இவரது வலையிலும் சிக்கி பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கண்காணிப்பு அவசியம்
மேற்கண்ட சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்றவை. இது போன்ற சமூக வலைதளங்களில் காதல் வலை விரிக்கும் ரோமியோக்களின் மோசடி பட்டியலை எடுத்தால் அது மிக நீளமாக இருக்கும். ஆசையாய் மகள் கேட்டால் என்பதற்காக செல்போன்களை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் அவர் இரவு 3 மணி வரை சமூக வலைதளங்களை உலாவுவதை கண்டுகொள்ளாமல் விடுவது எதிர்காலத்தில் அவர்கள் வாழ்க்கையில் வெகுவாக பாதிக்கும் என்பதை உணர வேண்டும். படிப்பைத் தவிர பிற தேவைகளுக்காக செல்போன் வாங்கித் தருவதை முடிந்த அளவு பெற்றோர்கள் தவிர்ப்பது நல்லது அப்படி வாங்கிக் கொடுத்தாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

எச்சரிக்கை தேவை
அதே நேரத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும் இளம்பெண்கள், குறைந்தபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இல்லையேல் பணத்தை மட்டுமல்ல வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். கடந்த சில நாட்களாக இதுபோன்ற மோசடி நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இளம்பெண்கள் மற்றும் பெற்றோர்கள் தீவிர முன்னெச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியம் என வலியுறுத்துகின்றனர் சைபர் கிரைம் காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications